கடந்த 2022ல் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கருணாஸ் நடித்து வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்த படம், ‘ஆதார்’. இது மலையாளத்தில் ‘ஆதார்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. ராம்நாத் பழனிகுமார் இயக்குகிறார். கதையின் நாயகனாக யோகி பாபு நடிக்கிறார். இப்படம் குறித்து ராம்நாத் பழனிகுமார் கூறுகையில், ‘யோகி பாபு நடிப்பில் மலையாளத்தில் ரீமேக் செய்கிறேன்.
தரமான படைப்புகளை கொண்டாடும் மலையாள ரசிகர்கள், ‘ஆதார்’ படத்தையும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்’ என்றார். கார்ப்பரேட் உலகம், தங்களின் சுயலாபத்துக்காக சாமானிய மனிதர்களை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்துகிறது என்பதை உண்மைக்கு நெருக்கமாக, விறுவிறுப்பாக ‘ஆதார்’ படம் சொல்கிறது.
கருணாஸ் நடித்த ‘திண்டுக்கல் சாரதி’என்ற படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியிருந்த ராம்நாத் பழனிகுமார், பிறகு கருணாஸ் நடித்த ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ஜீவா ஜோடியாக நயன்தாரா நடித்த ‘திருநாள்’ ஆகிய படங்களை எழுதி இயக்கியிருந்தார். ‘ஆதார்’ படம் சமீபத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
