×

விமர்சனம் திவ்யா

கல்லூரியில் ஒரே வகுப்பில் படிக்கும் ஆர்ஜேபி, கேத்தி இருவரும் காதலிக்கின்றனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த அவர்களின் காதலுக்கு கேத்தியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். உடனே தங்கள் மகளுக்கு வரன் பார்த்து திருமண ஏற்பாடு செய்யும்போது, திடீரென்று ஆர்ஜேபியுடன் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகிறார் கேத்தி. காவல் நிலையத்தில் பஞ்சாயத்து நடந்த பிறகு வீடு திரும்பும் கேத்தி என்ன ஆனார்? ஆர்ஜேபியின் திருமணம் நடந்ததா என்பது கதை.

கதைக்கேற்ற நாயகனாக ஆர்ஜேபி இயல்பாக நடித்து, அவரே எழுதி இயக்கி தயாரித்துள்ளார். கிளைமாக்சில் மனதை உருக வைக்கிறார். யதார்த்தமாக நடித்துள்ள கேத்தி, காதலனுக்காக பெற்றோரிடம் வாதாடும் காட்சியில் முத்திரை பதிக்கிறார். ‘தப்பு’ அடிக்கும் ஆர்ஜேபியின் தாத்தா பவுன்ராஜ், ஹீரோயின் பெற்றோர் அனந்த் ராம், கலாவதி, நண்பர்கள் சபி, ஜிவி, வில்லன் செந்தில் ஆகியோர் கச்சிதமாக நடித்துள்ளனர். கிளைமாக்ஸில் பவுன்ராஜ் பாடும் பாடல், வாழ்க்கையின் யதார்த்தத்தை புரியவைக்கிறது.

செல்வகுமார் ஒளிப்பதிவு, சங்கர் ராம் பின்னணி இசை கூடுதல் பலம். ஆணவக்கொலையை இன்னும் எத்தனை படங்களில் சொல்வார்கள் என்று தெரியவில்லை. அடுத்து நடக்கும் காட்சிகளை எளிதில் கணித்துவிட முடிகிறது. எல்லாவற்றையுமே இயக்குனர் ஆர்ஜேபி மாற்றி யோசித்திருக்கலாம்.

Tags : Divya ,RJP ,Kathy ,
× RELATED ஆண்களுக்கு பூனம் பஜ்வா எச்சரிக்கை