தமிழக மலைப்பகுதியிலுள்ள கிராமத்தை சேர்ந்த பிரியங்கா மோகனுக்கு கொரியா செல்ல வேண்டும் என்பது லட்சியம். கொரியா சென்ற பிறகு அவர் சந்திக்கும் பிரச்னைகளே மீதி கதை. கொரியாவில் படமான முதல் முழுநீள தமிழ் படம் இது. ‘நித்தம் ஒரு வானம்’ ரா.கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். திரைப்படம் மாதிரி தெரியவில்லை. யதார்த்தமான சூழலுக்குள் நாம் பயணிப்பதுபோல் காட்சிகள் உள்ளன. பிரியங்கா மோகனின் நடிப்பும், லொகேஷனும் தனி ரகம். கொரியாவில் தனியாக எதிர்கொள்ளும் சாவல்களை பிரியங்கா மோகன் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். பார்க் ஹை-ஜின், நோ ஹோ-ஜின், ரிஷிகாந்த், ஜங் ஜேஹியோன் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு கொரியாவின் அழகை கொட்டித் தீர்த்துள்ளது, ஹேஷாம் அப்துல் வஹாப்பின் பின்னணி இசை மனதுக்குள் ஊருடுகிறது. அந்தோணியின் எடிட்டிங் கூடுதல் பலம் சேர்த்துள்ளது. நெட்பிளிக்ஸில் படம் வெளியாகியுள்ளது. தங்கள் பேச்சை மீறி கொரியா சென்று கஷ்டப்படும் மகளை பெற்றோர் கண்டுகொள்ளாததும், பிறகு பாசத்தை பொழிவதும் உண்மைக்கு நெருக்கமாக அமைந்திருக்கிறது. நித்தம் ஒரு வானம் படத்துக்கு பிறகு மீண்டும் மனதுக்கு நெருக்கமான ஒரு படைப்பை ரா.கார்த்திக் தந்துள்ளார்.
