கடந்த 1990கள் வரை தெலுங்கு படவுலகின் மையமாக சென்னை இருந்து வந்ததால், தெலுங்கு திரையுலகினர் பலர் சென்னையில் வசித்தனர். வெங்கடேஷ், பிரபாஸ், மகேஷ் பாபு, அல்லு அர்ஜூன் ஆகியோர் சென்னையில் படித்து வளர்ந்தனர். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் சென்னையில்தான் படித்தார். சமீபத்தில் பிரபாஸ் அளித்துள்ள பேட்டியில், ‘சென்னையுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இங்கு பிறந்த நான், பிறகு டான்பாஸ்கோ பள்ளியில் படித்தேன். அன்று முதல் இன்று வரை சென்னையுடன் எனக்கான பந்தம் தொடர்கிறது. நான் ஆந்திரா சென்றிருந்தாலும், சென்னையை என்னால் எப்போதும் மறக்க முடியாது. சில வருடங்களாக தமிழில் பேச மறந்து விட்டேன்.
ஆனால் ராஜூ சுந்தரம், பிரபுதேவா, சேகர், ‘அம்மா’ ராஜசேகர் போன்ற தமிழ்நாட்டை சேர்ந்த டான்ஸ் மாஸ்டர்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதால், அடிக்கடி தமிழில் பேச வாய்ப்பு கிடைக்கிறது. தவிர, தெலுங்கு படவுலகை சேர்ந்த பல தொழில்நுட்ப கலைஞர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். எனவே, அவர்களுடன் பேசுவதால் தமிழ் மொழியுடன் இணைந்திருக்க முடிகிறது. இல்லை என்றால், அதை முழுமையாக மறந்திருப்பேன். சென்னைக்கு எப்போது வந்தாலும், எனது பள்ளியை பார்ப்பேன். சில ேநரங்களில் மக்கள், கலாசாரம், மொழியுடன் உண்மையான சென்னையை தவறவிடுகிறேன். பள்ளியில் படித்தபோது தினமும் அனைவரும் தமிழில் பேசுவோம். எனவே, அந்த தமிழ் இன்னும் எனக்குள் அழியாமல் இருக்கிறது’ என்றார்.
