இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனியை, ‘வேலியன்ட்’ என்ற தலைப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி லண்டன் அப்பல்லோ அரங்கில், உலகிலேயே மிகச்சிறந்த ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா குழுவை வைத்து அரங்கேற்றினார். ஆசிய கண்டத்தில் சிம்பொனி எழுதி, சர்வதேச அளவில் அரங்கேற்றிய முதல் இசை அமைப்பாளர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார். இதையொட்டி பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் மற்றும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல்வேறு திரையுலக பிரமுகர்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிறகு தமிழ்நாடு அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா மற்றும் அவரது 50 ஆண்டு கால திரைப்பயண கொண்டாட்டம் நடந்தது.
இந்த விழாவின் சிறப்பம்சமாக, லண்டனில் அவர் அரங்கேற்றியிருந்த சிம்பொனி இசை, அதே ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா குழுவினரால் அரங்கேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியை தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு இடங்களில் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இளையராஜா தெரிவித்திருந்தார். இதனால், இதுகுறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதன்படி, சென்னையில் வரும் மே 30ம் தேதி இந்நிகழ்ச்சி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடம், முன்பதிவு குறித்த விவரங்கள் வெகுவிரைவில் வெளியாகிறது. சென்னையில் முதல்முறையாக இளையராஜாவின் முதல் சிம்பொனி அரங்கேற்றப்படும் நிலையில், தற்போது இரண்டாவது சிம்பொனியை எழுதி வருவதாக இளையராஜா தெரிவித்துள்ளார்.
