நடிகர்கள் ரீல்ஸ், ஷார்ட்ஸில் கூட நடிக்கலாம்: சொல்கிறார் சரத்குமார்

 

சென்னை: மலையாளத்தில் ‘மேல் விலாசம்’, ‘அப்போதகேரி’, ‘இளையராஜா’ ஆகிய படங்களை இயக்கிய மாதவ் ரமாதாசன், தற்போது தமிழில் இயக்கியுள்ள படம் ‘ஆழி’. சரத்குமார், இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஜித் ரவி நடித்துள்ளனர். ஆனந்த் என்.நாயர் ஒளிப்பதிவு செய்ய, ஜாஸி கிஃப்ட் இசை அமைத்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி ஒலியை வடிவமைத்துள்ளார். கிரைம் திரில்லர் கதை கொண்ட இதை 888 புரொடக்‌ஷன்ஸ், செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரித்துள்ளார். வரும் 27ம் தேதி உத்ரா புரொடக்‌ஷன்ஸ் ெவளியிடுகிறது.

படம் குறித்து சரத்குமார் கூறுகையில், ‘இப்படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு நிஜமான கடலில் நடந்தது. மீன்பிடி படகு ஒன்றில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. மீன்பிடி கப்பல் அரங்கில், அதை இயக்குவதற்காக ஹைட்ராலிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. கமர்ஷியல் அம்சங்கள் கிடையாது. காட்சிகள்தான் பிரமிப்பு ஏற்படுத்தும். இன்றுள்ள ரசிகர்கள் பலவிதமான படங்களை பார்த்து ரசிக்கின்றனர். செல்போன் ஷார்ட்ஸ், ரீல்ஸில் கூட பலர் நடிக்கின்றனர். இதனால் நடிகர்களுக்கு ரீல்ஸ், ஷார்ட்ஸ், வெப்சீரிஸ், டி.வி, சினிமா ஆகியவற்றில் எதில் நடிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அந்த குழப்பம் தேவை இல்லை. எதில் நடித்தாலும் நடிப்பு என்பது ஒன்றுதான். காலத்துக்கு ஏற்ப நாம் மாற வேண்டும். இது சவுண்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்பதால், ரசூல் பூக்குட்டியின் பங்களிப்பு வலிமையானது. பெல்ஜியம் மலினாய்ஸ் வகை நாய் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. நானும், அதுவும் ஒரு சண்டைக் காட்சியில் நடித்துள்ளோம்’ என்றார்.

Related Stories: