தற்போது புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாடப்படுகிறது. வடநாட்டு தொழிலதிபர் ஜெகபதி பாபு ஓய்வின்றி உழைக்கிறார். மனைவி ஸ்ரீரஞ்சனி ஏற்படுத்திய சோகத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் கடவுளை வெறுக்கிறார். நடனக்கலைஞர் அபிராமி வெங்கடாசலத்துக்கு காலில் அடிபட்டு, நடன நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் தவிக்கிறார். இதனால், அவரது தந்தை ‘தலைவாசல்’ விஜய் கடவுளை திட்டுகிறார். மரணப்படுக்கையில் இருக்கும் தனது மகனை காப்பாற்ற முடியாது என்று டாக்டர் கைவிரித்த நிலையில், அவனது உயிரை காப்பாற்ற சுஹாசினி துடிக்கிறார்.
அமெரிக்காவில் காட்டுத்தீயில் சிக்கிய வீட்டில் இருவர் உயிருக்கு போராடுகின்றனர். இந்த ஐந்து சம்பவங்களும் நேர்க்கோட்டில் சந்திக்கும்போது, ஸ்ரீசத்ய சாய்பாபா அனைவரையும் எப்படி காப்பாற்றினார் என்பது மீதி கதை. ஜெகபதி பாபு, ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம், தலைவாசல் விஜய், சுஹாசினி ஆகியோர், அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர். நிழல்கள் ரவி, மோகன் ராமன் ஆகியோர் கவனத்தை ஈர்க்கின்றனர். புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவின் இருப்பிடங்களை கண்முன் கொண்டு வந்துள்ளார், ஒளிப்பதிவாளர் பி.எல்.சஞ்சய். தேவா இசையில் பாடல்களில் பக்தி மணம் கமழ்கிறது. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஜியோ ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம்.
