பெங்களூரு: யஷ், நயன்தாரா நடித்துள்ள ‘டாக்ஸிக்’ படத்தின் டீசரில் ஆபாச காட்சி இடம்பெற்றுள்ளது தொடர்பாக கர்நாடக மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகை கீது மோகன்தாஸ் இயக்கும் படம் டாக்ஸிக். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இதில் ‘கேஜிஎஃப்’ படங்களின் வெற்றிக்கு பிறகு யஷ் நடிக்கிறார். நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள். மார்ச் மாதம் படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
அதில் காரில் இளம்பெண்ணுடன் யஷ் தனிமையில் இருக்கும் காட்சி படு ஆபாசமாக சித்தரித்து படமாக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மகளிர் அணி சார்பில் கர்நாடக மாநில மகளிர் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘‘டாக்ஸிக் படத்தின் டீசரில் ஆபாச காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இது பெண்கள், குழந்தைகள், நமது சமூக கலாசார மதிப்பீடுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என கேட்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
