சென்னை: ‘தோனி கபடி குழு’, ‘கட்சிக்காரன்’ படங்களை இயக்கிய ப.ஐயப்பன், அடுத்து இயக்கியுள்ள படம், ‘உழவர் மகன்’. விவசாயம் சார்ந்த சமூகக் கருத்தை சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது. இதில் நாயகனாக கவுஷிக், நாயகிகளாக சிம்ரன் ராஜ், வின்சிட்டா ஜார்ஜ் நடித்துள்ளனர். மேலும் விஜித் சரவணன், யோகிராம், ரஞ்சன் குமார், சிவசேனாதி பதி, குமர வடிவேல் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதை சுபலட்சுமி ஃபிலிம்ஸ் சார்பாக கே.முருகன் தயாரித்துள்ளார். நா.ராசா, இணை தயாரிப்பு செய்கிறார். ஆக்ஷன் ரியாக்ஷன் சார்பில் ஜெனீஷ், இப்படத்தை ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிட இருக்கிறார். “விவசாயிகளின் சிக்கல்களைப் பற்றிப் பேசும் இந்தப் படம், பயிர்த் தொழிலை மீட்க என்ன செய்ய வேண்டும்? அது வளர்வதற்கும் மறுமலர்ச்சி காண்பதற்கும் தடைகளாக இருப்பது எது என்பது போன்ற விஷயங்களைச் சொல்கிறது. விவசாய மண், தொழில் சார்ந்த பிரச்னைகளைப் பற்றிய இந்தக் கதைக்குள் ஒரு காதலும் இருக்கிறது” என்று படக்குழு தெரிவித்துள்ளது.