நேத்ராவதி ஆற்றங்கரையில் சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களை தோண்டும் பணி தொடக்கம்: 2 மூத்த மருத்துவர்கள் முன்னிலையில் நடந்தது

பெங்களூரு: தர்மஸ்தலாவில் கடந்த திங்கட்கிழமை புகார்தாரர் அடையாளம் காட்டியதன் அடிப்படையில் சடலங்கள் புதைக்கப்பட்டதாகக் குறிக்கப்பட்ட இடங்களை தோண்டும் பணியை எஸ்.ஐ.டி நேற்று தொடங்கியது. தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டதாக முன்னாள் தூய்மைப் பணியாளர் கொடுத்த புகாரின் பேரில், மாநிலத்தையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய இந்த வழக்கை விசாரிக்க மாநில அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் கொடுத்தவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

பின்னர் புகார்தாரரை அழைத்துக்கொண்டு சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களை அடையாளம் காட்டச்சொல்லி அந்த இடங்களில் அடையாள குறியிடப்பட்டன. இதையடுத்து, நேற்று அந்த இடங்களை தோண்டும் பணி தொடங்கியது. புகார்தாரர் அடையாளம் காட்டிய, நேத்ராவதி ஆற்றங்கரையோர காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்ட சடலங்களை, மருத்துவர்கள் குழுவுடன் தோண்டி எடுக்கும் பணியை எஸ்.ஐ.டி தொடங்கியது. மங்களூரு கேஎம்சி மருத்துவமனையின் 2 அனுபவம் வாய்ந்த மூத்த மருத்துவர்களான ஜெகதீஷ் ராவ் மற்றும் ரஷ்மி ஆகிய இருவரும் எஸ்.ஐ.டி அதிகாரிகளுடன் அனுப்பிவைக்கப்பட்டனர். உதவி ஆணையரின் மேற்பார்வையின் கீழ் 12 தொழிலாளர்கள் சடலங்களை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

The post நேத்ராவதி ஆற்றங்கரையில் சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களை தோண்டும் பணி தொடக்கம்: 2 மூத்த மருத்துவர்கள் முன்னிலையில் நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: