மங்களூரு: தர்மஸ்தலா கோயில் முன்னாள் ஊழியர் தான் பல சடலங்களை புதைத்தாக கூறிய நேத்ராவதி நதிக்கரையோரம் எஸ்ஐடி அதிகாரிகள் மற்றும் போலீசார் குழுவாக சென்று சோதனை நடத்தினர். கர்நாடகாவின் தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டதாக கோயில் முன்னாள் தூய்மை பணியாளர் ஒருவர் கொடுத்த புகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கை விசாரிக்க மாநில அரசு, டிஜிபி பிரணோவ் மொஹந்தி தலைமையில் ஐபிஎஸ் அதிகாரிகள் எம்.என்.அனுசேத், சவுமியலதா, ஜிதேந்திர குமார் தயாமா ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இதைத்தொடர்ந்து மங்களூரு மல்லிகட்டேவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் எஸ்.ஐ.டி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தர்மஸ்தலா காவல் நிலைய ஆய்வாளரிடம் ஆதாரங்களைப் பெற்று அவரிடம் தகவல்கள் பெறப்பட்டன.
இந்நிலையில், தர்மஸ்தலா கிராமத்தின் நேத்ராவதி ஆற்றங்கரையில் நூற்றுக்கணக்கானவர்கள் கொலை செய்து புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் புகார் அளித்தவருடன் அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். ஐபிஎஸ் ஜிதேந்திர குமார் தயமா, எஸ்பி சைமன், விசாரணை அதிகாரி லோகேஷ், டிஎஸ்பி மஞ்சுநாத் மற்றும் பிற காவல்துறையினர் நேத்ராவதி ஆற்றங்கரை அருகே சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடங்களை பார்வையிட்டு அடையாள குறியீடு பதித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் இந்த வழக்கு விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், இன்று குறியீடு செய்யப்பட்ட இடங்களில் தோண்டப்பட்டு சடலங்கள் எதுவும் உள்ளதா என்று கண்டறியப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post தர்மஸ்தலாவில் சடலங்கள் புதைத்த இடத்தில் எஸ்ஐடி அதிகாரிகள் சோதனை: இன்று தோண்டி சோதனை நடத்த திட்டம் appeared first on Dinakaran.
