உத்தரபிரதேச மாநிலத்தில் ‘நீண்டகால முதல்வர்’ சாதனை படைத்த யோகி ஆதித்யநாத்

லக்னோ: உத்தரபிரதேச அரசியலில் நீண்ட காலம் பதவியில் நீடிக்கும் முதல் முதல்வர் என்ற நிலையை யோகி ஆதித்யநாத் எட்டியுள்ளார். பாஜக மூத்த தலைவரான யோகி ஆதித்யநாத், உத்திரப் பிரதேசத்தின் 22வது முதல்வர் ஆவார். கோரக்பூரில் உள்ள கோரக்நாத் மடத்தின் மடாதிபதியாக இருந்த இவர், கடந்த 1998ம் ஆண்டில் தனது 26வது வயதில் கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று அரசியலில் நுழைந்தார். தொடர்ந்து ஐந்து முறை கோரக்பூரிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 2017ம் ஆண்டில் நடந்த உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், பாஜகவின் மிக முக்கிய மற்றும் செல்வாக்கு மிக்க முகங்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இந்தத் தேர்தலில் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றதைத் தொடர்ந்து, மார்ச் 19, 2017 அன்று உத்தரப் பிரதேச முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து 2022 சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்றதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக முதலமைச்சரானார். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் மிக நீண்ட காலம் முதல்வர் பதவியில் நீடிக்கும் முதல் தலைவர் என்ற புதிய சாதனையை யோகி ஆதித்யநாத் படைத்துள்ளார்.

அம்மாநிலத்தின் முதல் முதல்வராக இருந்த பண்டிட் கோவிந்த் பல்லப் பந்த்தின் சாதனையை தற்போது அவர் முறியடித்துள்ளார். யோகி ஆதித்யநாத் இதுவரை 8 ஆண்டுகள் மற்றும் 132 நாட்கள் பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ளார். முன்னாள் முதல்வர் பண்டிட் கோவிந்த் பல்லப் பந்த்தின் மொத்தப் பதவிக்காலம் 8 ஆண்டுகள் மற்றும் 127 நாட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post உத்தரபிரதேச மாநிலத்தில் ‘நீண்டகால முதல்வர்’ சாதனை படைத்த யோகி ஆதித்யநாத் appeared first on Dinakaran.

Related Stories: