மின்வாரிய அதிகாரிகள் தகவல் மாநிலத்தின் மின் தேவை கணிசமாக குறைந்தது

சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலவும் குளிர்ந்த காலநிலை காரணமாக மாநிலத்தின் மின் தேவை கணிசமாக குறைந்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மின் விநியோக கழகத்தின் தரவுகளின் அடிப்படையில் 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, வீடு, விவசாயம், தொழில்கள் மற்றும் வணிகப் பயனர்கள் என மொத்தம் 3.16 கோடி மின் நுகர்வோர் உள்ளனர்.

இவை தற்போது 10 சதவீதமாக அதிகரித்து 3.47 கோடியாக உள்ளது. இதனால் மின் தேவை என்பது ஆண்டுக்கு சராசரியாக 6 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக நிலவும் குளிர்ந்த காலநிலை காரணமாக மாநிலத்தின் மின் தேவை குறைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கூறியதாவது:

சமீபத்தில் வானிலை மாற்றத்தால் தமிழ்நாட்டின் மின் தேவை ஆயிரம் மெகாவாட் அளவிற்கு குறைந்துள்ளது. உதாரணமாக கடந்த வாரம் முழுவதும் பல மாவட்டங்களில் வெப்ப நிலை 40 டிகிரியாக இருந்தது. இதன் காரணமாக மின் தேவை சராசரி அளவைவிட 400 மில்லியன் யூனிட் வரை அதிகரித்தது. அதாவது, 18,853 மெகாவாட்டில் இருந்து தற்போது 17,001 மெகாவாட்டாக குறைந்தது. இதனால் மின்நுகர்வு 400 மில்லியன் யூனிட்டில் இருந்து 370 மில்லியன் யூனிட்டாக குறைந்துள்ளது.

இதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மேகமூட்டம் காரணமாக குடியிருப்புகளில் ஏசி போன்றவற்றை பயன்படுத்துவது குறைந்துள்ளது. அதேபோல் மழை பொழிவு காரணமாக விவசாயத்திற்கான மோட்டர் பம்ப் செட்களின் தேவையும் குறைந்துள்ளது. இவை தற்காலிகமானது என்றாலும் குளிர்ந்த காலநிலைக்கு பிறகு மின் தேவை நுகர்வோர்களிடையே அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

The post மின்வாரிய அதிகாரிகள் தகவல் மாநிலத்தின் மின் தேவை கணிசமாக குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: