திருவள்ளூர்: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடைபெறுவது முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மு.பிரதாப் தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025-26 ம் ஆண்டு மாவட்ட அளவில் 22.8.25 முதல் 12.9.25 வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய 5 பிரிவுகளில் 53 வகையான விளையாட்டு போட்டிகள் மற்றும் மண்டல அளவில் 14 வகையான போட்டிகளும் என மொத்தம் 67 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
குடி தண்ணீர் ஏற்பாடு, தற்காலிக கழிப்பறை, சாமியானா பந்தல், விழா மேடை அமைத்தல், மைதானம் தூய்மை செய்தல் ஆகியவற்றை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். விளையாட்டு போட்டி நடைபெறும் 22.8.25 முதல் 12.9.25 வரை அனைத்து இடங்களிலும் சுகாதார குழுவுடன் ஆம்புலன்ஸ் எற்பாடு செய்ய வேண்டும். விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 22.8.2025 அன்று நடைபெறும் போட்டிகளில் பங்குபெறும் வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு ஆசிரியர் ஒருவரை உதவியாளராக நியமனம் செய்ய வேண்டும். மேலும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்த அனைத்து உறுப்பினர்களும் தங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
The post முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.
