திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை நீர்மட்டம் கடந்ந ஒரு மாதமாக முழு கொள்ளளவில் உள்ளது. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. தவிர, ஆற்றின் வழியோரம் நூற்றுக்கணக்கான கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இந்த அணையில் 4.04 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையும், வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் அமராவதி அணைக்கு நீர்வரத்து இருக்கும்.
அணையின் நீர்மட்டம் கடந்த ஜூன் 17ம் தேதி 88 அடியை எட்டியதால் உபரிநீர் ஆற்றிலும், பிரதான கால்வாயிலும் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் , நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பருவமழையால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையில் நீர்மட்டம் 88.03 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2685 கன அடியாகவும், ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக வினாடிக்கு 2716 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த ஒரு மாத காலமாக அணை நீர்மட்டம் முழு கொள்ளளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post முழு கொள்ளளவில் அமராவதி அணை நீர்மட்டம்: உபரிநீர் வெளியேற்றம் appeared first on Dinakaran.
