குளச்சல், ஜூலை 21: வெள்ளிச்சந்தை அருகே காரங்காடு ஆலன்விளையை சேர்ந்தவர் கிராஸ்ராஜ் (48). கொத்தனார். அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவர் குருந்தன்கோடு அடுத்த ஆசாரிவிளையில் டீக்கடை நடத்தி வருகிறார். கிராஸ்ராஜூம், ரமேசும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இதனால் கிராஸ்ராஜ் சிறிது சிறிதாக ரமேசுக்கு ரூ.40 ஆயிரம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கிராஸ்ராஜ் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் ரமேஷ் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தாராம்.
சம்பவத்தன்று கிராஸ்ராஜ், ரமேசின் டீக்கடைக்கு சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் கடையில் பாத்திரத்தில் இருந்த வெந்நீரை எடுத்து கிராஸ்ராஜ் மீது ஊற்றினார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த கிராஸ்ராஜ் மீட்கப்பட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின்பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் நண்பர் மீது வெந்நீர் ஊற்றிய ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வெள்ளிச்சந்தை அருகே கொத்தனார் மீது வெந்நீர் வீச்சு: டீக்கடைக்காரர் மீது வழக்கு appeared first on Dinakaran.
