சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை தடுத்தால் வழக்கு: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை எவரேனும் தடுத்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வெங்கடேசன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா, புதுக்குடி எனும் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் பட்டியல் இனத்தவர்களால் நிறுவப்பட்ட சிலைகளை ஒரு பிரிவினர் இடித்து தள்ளி விட்டனர்.

கோயிலில் அமைக்கப்பட்டுள்ள பெரிய இரும்பு கதவுக்கு பின்பு இருந்துதான் சுவாமி தரிசனம் செய்ய பட்டியல் இனத்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஜூலை 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ள தேர் திருவிழாவில் பட்டியல் இனத்தவர்கள் பங்கேற்கவும், கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில் சாதி ரீதியான பாகுபாட்டை அனுமதிக்க முடியாது.

புதுக்குடி அய்யனார் கோயிலுக்கு பட்டியலின மக்கள் செல்வதை யாரும் தடுக்கவில்லை என்பதை அரியலூர் மாவட்ட எஸ்பி உறுதி செய்ய வேண்டும். கோயிலில் அனைத்து தரப்பு மக்களும் தரிசனம் செய்வதையும், விழாக்களில் பங்கேற்பதையும் அவர் உறுதி செய்ய வேண்டும். பல்வேறு தலைவர்களின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஆலய நுழைவுச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை. சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை எவரேனும் தடுத்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை தடுத்தால் வழக்கு: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: