நீட் தேர்வு தோல்வியால் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர் கர்நாடக மாணவிக்கு ரோல்ஸ் ராய்ஸில் ரூ.72.3 லட்சம் சம்பளத்தில் வேலை

மங்களூரு: மங்களூரு வியாஸ் நகரை சேர்ந்தவர் ரிதுபர்னா. பள்ளி படிப்பை முடித்த ரிதுபர்னாவுக்கு டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது கனவு. ஆனால், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றததால் அவருக்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கவில்லை. இதனால், அவர் ஏமாற்றமடைந்தார். இதனால், மங்களூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் பட்டப்படிப்பில் சேர்ந்தார்.

தற்போது 6வது செமஸ்டர் படித்து வரும் ரிதுபர்னாவுக்கு அமெரிக்காவின் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டு சம்பளம் ரூ.72.3 லட்சத்துடன் வேலை கிடைத்துள்ளது. இதுகுறித்து ரிதுபர்னா கூறியதாவது: ஒரு காலத்தில் மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நீட் தேர்வில் ஏற்பட்ட பின்னடைவால் அந்த கனவு நனவாகவில்லை. கடந்த 2022ம் ஆண்டு, ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷனில் சேர்ந்தேன். முதல் ஆண்டிலேயே, அறுவடை மற்றும் தெளிப்பான் சாதனத்தை கண்டுபிடித்தேன்.

அது கோவாவில் 15க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட சர்வதேச கண்டுபிடிப்பு மாநாட்டில் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தது. இதையடுத்து, மங்களூரு நகரக் கழகம் எதிர்கொள்ளும் கழிவு மேலாண்மை சவால்களை நிவர்த்தி செய்வதற்கான செல்போன் செயலியை வடிவமைத்ததன் மூலம் எனது கண்டுபிடிப்புகள் தொடர்ந்தது. நான், அரசு பேருந்தில் கல்லூரிக்கு செல்கிறேன். கடின உழைப்பும் விடாமுயற்சியும் யாரையும் பெரிய உயரத்துக்கு அழைத்து செல்லும் என்பதற்கு நானே சாட்சி என்றார்.

The post நீட் தேர்வு தோல்வியால் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர் கர்நாடக மாணவிக்கு ரோல்ஸ் ராய்ஸில் ரூ.72.3 லட்சம் சம்பளத்தில் வேலை appeared first on Dinakaran.

Related Stories: