பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். 1960-1970 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த சரோஜாதேவி, பத்மஸ்ரீ, பத்ம பூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 2008ல் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான ஒன்றிய அரசின் தேசிய விருதை பெற்றிருந்தார் சரோஜாதேவி. 1997ல் தமிழ்நாடு அரசு சார்பில் நடிகை சரோஜாதேவிக்கு எம்.ஜி.ஆர். விருது வழங்கி கவுரவிக்கப்பட்டிருந்தது. 1955ம் ஆண்டு கன்னட திரைப்படம் மகாகவி காளிதாஸ் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், 50 ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையில் 200க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு அடியெடுத்து வைத்தார். 1959ம் ஆண்டில் வெளியான கல்யாணப் பரிசு திரைப்படம் மூலம் முன்னணி நடிகையாக உருவெடுத்தார். நாடோடி மன்னன், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, பார்த்திபன் கனவு, அன்பே வா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர். உடன் 26 படங்களிலும் சிவாஜி கணேசனுடன் 22 படங்களில் நடித்துள்ளார். ஜெமினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகை சரோஜாதேவியின் 100வது திரைப்படம் பெண் என்றால் பெண் எனும் தமிழ் திரைப்படமாகும்.
1965ல் கர்நாடக அரசு நடிகை சரோஜாதேவிக்கு சிறப்பு பெயராக அபிநய சரஸ்வதி எனும் விருதை வழங்கியது. ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார்களை விட அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையை பெற்றவர் சரோஜாதேவி. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம்பெற்றவர். ராதாதேவி என்ற தனது பெயரை திரை உலகிற்காக சரோஜாதேவி என்று மாற்றிக்கொண்டார். கடைசியாக நடிகர் சூர்யா நடித்த ஆதவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி உள்ளிட்ட அடைமொழிகளால் ரசிகர்களால் சரோஜாதேவி அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ரசிகர்களின் கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி.. பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) உடல்நலக் குறைவால் காலமானார்!! appeared first on Dinakaran.
