சிறைகளில் மூர்க்கத்தனம் அதிகரிப்பது முக்கிய சவால்: தடுப்பு நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: சிறைகளில் மூர்க்கத்தனம் அதிகரிப்பது முக்கியமான சவால் என சுட்டிக்காட்டியுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகம், இதை சரி செய்ய அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் மாநிலங்களுக்கு வலியுறுத்தி உள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில், ‘‘சிறைகளில் மூர்க்கத்தனம் அதிகரித்தல் பொதுவான ஆபத்து.

இது முக்கியமான சவாலாக மாறி வருகிறது. பல குற்றச் செயல்களுக்கு காரணமாகவும் கருதப்படுகிறது. இதுபோன்ற கைதிகள் சில சமயங்களில் வன்முறை செயல்களில் ஈடுபடலாம். சக கைதிகள், சிறை ஊழியர்கள் அல்லது வெளியில் இருந்து வரும் நபர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடலாம். எனவே, சிறைகளில் கைதிகளின் மூர்க்கத்தனத்தை குறைப்பது அவசர தேவையாக உள்ளது.

அத்தகைய நபர்களுக்கு தேவையான உளவியல் பயிற்சி அளிப்பது பொது ஒழுங்கை பாதுகாப்பதற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. மூர்க்கத்தனத்தை பரப்பும் கைதிகளை பொது கைதிகளிடம் இருந்து பிரிக்க வேண்டும். அவர்களுக்காக உயர் பாதுகாப்பு சிறை வளாகத்தை நிறுவுவது குறித்து பரிசீலிக்க வேண்டும். கைதிகளை வெற்றிகரமாக சமூகத்தில் மீண்டும் இணைப்பதற்கு சிறைச்சாலைகளில் மூர்க்கத்தனப் பிரச்னையை தீர்ப்பது அவசியம்’’ என கூறப்பட்டுள்ளது.

The post சிறைகளில் மூர்க்கத்தனம் அதிகரிப்பது முக்கிய சவால்: தடுப்பு நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: