சமூக வலைதளப்பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு அன்புமணி ஆதரவாளர்கள் மீது டிஜிபியிடம் ராமதாஸ் புகார்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் தனது முகநூல் மற்றும் எக்ஸ் சமூக வலைதளக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் டிஜிபி அலுவலகத்தில் அதிகாரபூர்வமாக புகார் அளித்துள்ளார். ராமதாஸ் நேற்று டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எனது அதிகாரப்பூர்வ எக்ஸ் மற்றும் முகநூல் கணக்குகளை அன்புமணியின் ஆதரவாளர்கள் கைப்பற்றி உள்ளனர்.

எனது சமூக வலைதள கணக்குகளின் பாஸ்வேர்டுகள் மாற்றப்பட்டுள்ளன. அவற்றை மீட்டெடுப்பதற்கு தேவையான தகவல்கள் வேறொருவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அதனால், என்னுடைய சமூக வலைதள கணக்குகளை மீட்டுத் தர வேண்டும். அதன் பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட தரவுகளை திரும்பப் பெற்றுத் தர வேண்டும். எனது சமூக வலைதளப் பக்கங்களை ஹேக் செய்த நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி கண்டெடுக்கப்பட்டதாக ராமதாஸ் தெரிவித்திருந்தார். குறிப்பாக, தன்னுடைய நாற்காலிக்கு அருகிலேயே அந்த கருவி பொருத்தப்பட்டிருந்ததாகவும், விலை உயர்ந்த அந்த கருவி லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்டது எனவும் அவர் கூறியிருந்தார். மேலும், இதனை செய்தவர்கள் யார், அவர்களின் நோக்கம் என்னவென்று ஆராய்ந்து வருவதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பரபரப்பு தகவலை ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
தற்போது ராமதாஸ் தரப்பில் இருந்து டி.ஜி.பி.க்கு அதிகாரப்பூர்வமாக அளிக்கப்பட்டுள்ள புகார் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சமூக வலைதளப்பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு அன்புமணி ஆதரவாளர்கள் மீது டிஜிபியிடம் ராமதாஸ் புகார் appeared first on Dinakaran.

Related Stories: