கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்

*எதிர்க்கட்சி தலைவர் சிவா பேச்சுவார்த்தை

புதுச்சேரி : புதுச்சேரி ஒதியம்பட்டில் இயங்கி வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் எல்பிஎப் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, வருடாந்திர பண்டிகை போனஸ், போக்குவரத்துப்படி, பஞ்சப்படி, கேண்டீன் அலவன்ஸ், சிஎல் விடுமுறை, விடுமுறை நாட்களில் வேலை பார்த்தால் கூடுதல் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணியை புறக்கணித்து நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த எதிர்க்கட்சி தலைவர் சிவா, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தொழிலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தொழிற்சாலை நிர்வாகத்திடம் வழங்கி, கோரிக்கைகள் அனைத்தும் ஒருவார காலத்துக்குள் தீர்க்க வேண்டும். அதுவரை தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணி செய்வார்கள்.

நிர்வாகம் தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலட்சியம் காட்டினால் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்த நேரிடும் என்றும் எச்சரித்தார். பின்னர் நிர்வாகம் தரப்பில் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். இந்த சந்திப்பின்போது தொழிற்சாலை பொதுமேலாளர் சிவதாசன், மனிதவள மேம்பாட்டு அதிகாரி ஆனந்த், எல்பிஎப் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் அமுதா, லட்சுமி, கல்பனா, அமுதவல்லி, புண்ணியகோடி மற்றும் திமுக கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: