பர்னிச்சர் தொழிற்சாலையில் பயங்கர தீ: பல கோடி பொருட்கள் எரிந்து சேதம்

திருமலை: பர்னீச்சர் தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் உள்ள வாங்காயகுடேமில் தனியாருக்கு சொந்தமான பர்னிச்சர் மற்றும் குஷன் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. நேற்றிரவு வழக்கம்போல் தொழிற்சாலையை பூட்டிவிட்டு சென்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை பர்னிச்சர் தொழிற்சாலையில் இருந்து கரும்புகையுடன் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் கொழுந்துவிட்டு எரிந்த தீயில் இருந்து வெளியேறிய கரும்புகை அருகில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையிலும் சென்றதால் அங்கிருந்த நோயாளிகள் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வந்து விசாரணை நடத்தியபோது, மின்கசிவு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என தெரியவந்தது. இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. அதிகாலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அப்போது, ஊழியர்கள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புதுறையினர் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பர்னிச்சர் தொழிற்சாலையில் பயங்கர தீ: பல கோடி பொருட்கள் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Related Stories: