பொது சுகாதாரத்துறை தகவல் இதயம் காப்போம் திட்டத்தில் மார்ச் வரை 16,275 பேர் பயன்

சென்னை: இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் 16,275 பேர் பயனடைந்துள்ளனர் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மாரடைப்பு இறப்பு அதிகரித்து வருகிறது. சரியான நேரத்தில் மாரடைப்புக்கு சிகிச்சை கிடைக்காதது பெரிய பிரச்னையாக இருந்தது. இதற்கு தீர்வாக தமிழக அரசின் ‘இதயம் காப்போம் திட்டம்’ 2023ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரூ.3.37 கோடியில் தொடங்கப்பட்டது. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் போது முதல் 60 நிமிடம் மிகவும் முக்கியமானது. எனவே தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நேரம் ஆகும். இதனால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலில் மாரடைப்பை தடுக்கும் வகையில் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், மாரடைப்புடன் வருபவர்களுக்கு அதனை தடுக்கும் வகையில் ஆஸ்பிரின் 150 எம்ஜி 2 மாத்திரைகள், க்ளோபிடோக்ரல் 75 எம்ஜி 4 மாத்திரைகள், அடோர்வாஸ்டாடின் 10 எம்ஜி 8 மாத்திரைகள் என மொத்தம் 14 மாத்திரைகள் வழங்கப்படுகிறது. பிறகு மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது இந்த திட்டம் மூலம் கடந்த மார்ச் மாதம் வரை 16,275 பேர் பயனடைந்துள்ளனர். 2023ம் ஆண்டு முதல் மார்ச் மாதம் வரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் 15,580 பேரும், துணை சுகாதார நிலையங்களில் 695 பேரும் என மொத்தம் 16,275 பேர் மாரடைப்பு அறிகுறியுடன் வந்தவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் மாரடைப்பு தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

The post பொது சுகாதாரத்துறை தகவல் இதயம் காப்போம் திட்டத்தில் மார்ச் வரை 16,275 பேர் பயன் appeared first on Dinakaran.

Related Stories: