மேற்கு திசை காற்று மாறுபாடு தமிழ்நாட்டில் 2 நாள் மழை பெய்யும்

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் லேசான மழை பெய்யும். 10ம் தேதிக்கு பிறகு வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை குறைவாக பெய்யும் வானிலை நிலவுகிறது. இருந்தபோதும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 20 மிமீ முதல் அதிகபட்சமாக 30 மிமீ வரை மழை பெய்துள்ளது. வட மாவட்டங்களில் தூறல் மழை பெய்தது. இன்று ஆந்திர பகுதியில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில், மியான்மர் பகுதியில் இருந்தும் மேற்கு வங்கம், ஜார்கண்ட் பகுதியிலும் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் மேற்கு நோக்கி நகர்ந்து செல்வதில் பெரும் போராட்டத்தை சந்தித்து வருகிறது. மிக மெல்லமாக நகர தொடங்கியுள்ளது. இருப்பினும் 11ம் தேதி பாகிஸ்தான் எல்லைக்கு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு காற்று சுழற்சி வட இந்திய பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இதனால் ஆந்திர எல்லையோரம், திருப்பத்தூர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மாலையில் மழை பெய்யும். 10ம் தேதி முதல் இந்த நிலை முற்றிலும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் 18ம் தேதி மேலும் ஒரு காற்றுத் தாழ்வுப்பகுதி உருவாகி ஆந்திர வடக்கு பகுதி மற்றும் ஒடிசாவுக்கு வரும். அதனால் தமிழகத்திலும் மழை பெய்யும். வெப்பக் காற்றை குளிர்விக்கும் சாதகமாக இந்த காற்றழுத்தம் இருக்கும் என்பதால் தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்பை உருவாக்கித் தரும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது. அதன் ெதாடர்ச்சியாக கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 50கிமீ வேகத்தில் வீசியது. இதேநிலை இன்றும் தொடரும். மேலும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை தமிழகம் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னையில் நேற்று பகலில் 100 டிகிரி வெயில் நிலவியது. மாலையில் நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்தது. புறநகரிலும் சில இடங்களில் மழை பெய்தது. இதையடுத்து, இன்றும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரியாக இருக்கும். மேலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வரைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் இன்று வீசும்.

The post மேற்கு திசை காற்று மாறுபாடு தமிழ்நாட்டில் 2 நாள் மழை பெய்யும் appeared first on Dinakaran.

Related Stories: