ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் சொத்து முடக்கத்தை நீக்க கோரி ஐகோர்ட்டில் மூதாட்டி மனு: லஞ்ச ஒழிப்புத்துறை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் தனது சொத்தை முடக்கி பிறப்பித்த உத்தரவை நீக்க கோரி காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 1991-96ம் ஆண்டு காலத்தில் முதல்வராக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, இந்த வழக்கு தொடர்பாக முடக்கப்பட்ட சொத்துகளை பத்திர பதிவு செய்யக்கூடாது என்று வாலாஜாபாத் சார் பதிவாளருக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கடந்த 2021 பிப்ரவரி 27ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த சூழ்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், ஊத்துக்காடு கிராமத்தில் தனக்கு சொந்தமான 2.15 ஏக்கர் நிலத்துக்கு வில்லங்கச் சான்றிதழ் விண்ணப்பித்த போது, ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்ததாக கூறி, வாலாஜாபாத், ஆறுமுகப்பேட்டையை சேர்ந்த 68 வயது மூதாட்டி கம்சலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் கடனுக்கு அடமானமாக வைக்கப்பட்ட நிலத்தை பொது ஏலத்தில் வாங்கினேன். ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்குக்கும், தனது சொத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை, மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் ஆகியோருக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை. அதனால், சொத்து முடக்கத்தை நீக்க வேண்டும்.

இந்த சொத்து தொடர்பாக பத்திரப்பதிவு எதுவும் மேற்கொள்ளக் கூடாது என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, மனுதாரரின் கோரிக்கை குறித்து ஆவணங்களை சரிபார்த்து, பதில் அளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறை, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் ஆகியோருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

The post ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் சொத்து முடக்கத்தை நீக்க கோரி ஐகோர்ட்டில் மூதாட்டி மனு: லஞ்ச ஒழிப்புத்துறை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: