புளியங்குடி : மொகரம் பண்டிகையை முன்னிட்டு புளியங்குடி அசேன் ஹுசைன் தர்காவில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் நோன்பிருந்த இஸ்லாமியர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்கள் செலுத்தினர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த விழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர்.
மொகரம் பிறை 10வது நாள் முகமது நபியின் பேரன் அசன் உசேன் கர்பலா போரில் கொல்லப்பட்டதன் நினைவாக மொகரம் மாதத்தின் 10வது நாள் கந்தூரி விழா புளியங்குடியில் உள்ள அசன் ஹுசேன் தர்காவில் நடைபெற்றது. மாலை நேரத்தில் தர்காவில் இருந்து புறப்பட்டு ஊர்வலம் நடந்தது. பின்னர் சந்தனக்கூடு ஊர்வலம் நடத்தப்பட்டது.
இரவு 10 மணியளவில் ஏராளமான இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து அசன் உசேன் நினைவாக தர்காவில் உள்ள வளாகத்துக்குள் பூக்குழி இறங்கினர். இதில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும் விறகு, உப்பு ஆகியவற்றை நேர்த்தி கடனாக செலுத்தினர்.
பூ இறங்கிய பின்னர் தீ கங்குகளை அகற்றிய பிறகு அந்த இடத்தில் ஒரு பானைக்குள் பானைகாரம், அரிசி ரொட்டிகளையும் வைத்து புதைத்து விடுகின்றனர். இதனை அடுத்த ஆண்டு எடுத்து குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் உட்கொண்டால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இதனை ஏராளமான இந்துக்களும் வாங்கி செல்வர். விழாவை பால்ராவுத்தர் வகையறா ஐந்து தலைமுறையாக நடத்தி வருகின்றனர்.
தற்போது நாகூர்மைதீன், தீவான்மைதீன், உசேன்ராவுத்தர், அசன் மதுசூதனன், காதர்மைதீன், மைதீன்பிச்சை மற்றும் செட்டியார் வகையறாக்கள் ஆகியோர் நடத்தி வருகின்றனர். விழாவையொட்டி நடைபெற்ற குதிரை ஊர்வலம், கொடி ஊர்வலம், சந்தனக்காப்பு ஊர்வலத்தை காண புளியங்குடி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
இந்த விழாவில் புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்திரபாண்டியன், கவுன்சிலர்கள் பொன்னு துரைச்சி, காந்திமதியம்மாள் மற்றும் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர்.
இந்த விழா இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே சமூக நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
The post மொகரம் பண்டிகையை முன்னிட்டு புளியங்குடி தர்காவில் பூக்குழி திருவிழா appeared first on Dinakaran.
