நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள சந்திரமுகி பட காட்சிகளை நீக்க கோரி வழக்கு: தயாரிப்பு மற்றும் இணையதள நிறுவனங்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தை டார்க் ஸ்டூடியோ தயாரித்தது. இந்த ஆவணப்படம் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தில், தனது வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதி பெறாமல் நானும் ரவுடி தான் பட காட்சிகளை பயன்படுத்தியுள்ளதாகக் கூறி, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதி பெறாமல், சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டி படத்தின் பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இண்டர்னேஷனல் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில், ஆவண படத்தில் சந்திரமுகி பட காட்சிகளை நீக்க கோரியும், 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால், இதுவரை அவற்றை நயன்தாரா பயன்படுத்தி வருகிறார்.

எனவே, ஆவணப் படத்தில் சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். ஆவண படத்தில் உள்ள காட்சிகளை நீக்க வேண்டும். ஆவண படத்தின் மூலம் ஈட்டிய லாபக் கணக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு டார்க் ஸ்டூடியோவுக்கும், நெட் பிலிக்ஸ் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டார்.

The post நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள சந்திரமுகி பட காட்சிகளை நீக்க கோரி வழக்கு: தயாரிப்பு மற்றும் இணையதள நிறுவனங்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: