விழாவில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 4வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவைகள் கிடைப்பதை ஒன்றிய அரசு கடந்த 11 ஆண்டுகளில் உறுதி செய்துள்ளது. இந்த மருத்துவமனையில் தினசரி 10 ஆயிரத்துக்கும் அதிகமான புற நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். உள்நோயாளிகளுக்கு 1000 படுக்கைகள் உள்ளன. மேலும் இந்தாண்டு முதுநிலை மருத்துவ படிப்பில் 50 இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன.
60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாக உதவி உபகரணங்களை தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில்,திருப்பூரில் ஒரு இஎஸ்ஐ மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு மருத்துவமனை தொடங்கப்படும். கடந்த 11 ஆண்டுகளில் நாட்டில் 20 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் 5 லட்சம் வரியிலான காப்பீட்டுடன் அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை அரசு உறுதிசெய்துள்ளது.
ஏழை மக்கள் மருந்துகளுக்காக அதிகம் செலவு செய்வதை குறைப்பதற்காகவே நாடு முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மருந்தக மையங்கள் மூலம் மலிவு விலையில் மருந்துகள் வழங்கப்படுகின்றன. அதேபோல உடல்பருமனை குறைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்ட உணவில் 10% எண்ணெய் அளவை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். ஆயுஷ் மருத்துவ முறைகள் பல்வேறு நோய்களுக்கு மிகுந்த பயனளிக்கிறது. யோகா அதில் முக்கியப் பங்காற்றுகிறது. அண்மையில் நடந்த 11வது சர்வதேச யோகா தினத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் யோகா செய்து உலக சாதனை நிகழ்த்தினர். 2047ம் ஆண்டு இந்தியா ஒரு வல்லரசாக அனைத்து துறைகளிலும் முன்னேறும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் காளிதாஸ் தத்தாத்ரேயா சவான், மருத்துவ கண்காணிப்பாளர் கே.புஷ்பலதா மற்றும் மருத்துவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post ஸ்ரீபெரும்புதூரில் விரைவில் இஎஸ்ஐ மருத்துவமனை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல் appeared first on Dinakaran.
