திருமணம் நடக்க இருந்த நிலையில் மாயமான மணப்பெண் காதலனுடன் டும்டும்டும்: மணக்கோலத்தில் வாட்ஸ் அப்பில் போட்டோ அனுப்பினார்

குமாரபுரம்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே புலியூர்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஷைனி பிரியா (30). கோவையில் உள்ள தனியார் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்கிறார். இவருக்கும், இரணியல் பகுதியை சேர்ந்த இன்ஜினியருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. நிச்சயதார்த்தம் முதல் அனைத்து நிகழ்வுகளிலும் ஷைனி பிரியா பங்கேற்றுள்ளார். இவர்களின் திருமணம் நேற்று (7ம்தேதி) தக்கலையில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் கடந்த 5ம்தேதி அதிகாலையில் மணப்பெண் ஷைனி பிரியா திடீரென மாயமானார். பெற்றோர் அவரது செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

தகவலறிந்து மணமகன் வீட்டாரும் அதிர்ச்சி அடைந்து பல்வேறு இடங்களில் மணப்பெண்ணை தேடினர். எங்கும் கிடைக்காததால் இது குறித்து மணப்பெண்ணின் சகோதரன் சஞ்சீவ் தக்கலை போலீசில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் இளம்பெண் மாயம் என வழக்குபதிந்து விசாரணையை தொடங்கினர். இந்தநிலையில் நேற்று காலை ஷைனி பிரியாவின் செல்போனில் இருந்து, அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிலருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு போட்டோ அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதில் வாலிபர் ஒருவருடன், ஷைனி பிரியா மணக்கோலத்தில் இருந்தார். கோயில் ஒன்றில் வைத்து இந்த திருமணம் நடந்துள்ளது.

இந்த போட்டோவை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தனக்கு நிச்சயிக்கப்பட்டு இருந்த மாப்பிள்ளைக்கும், இந்த போட்டோவை அனுப்பி வைத்து மன்னிப்பு கோரி உள்ளார். ஷைனி பிரியா, வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவர் கோவையை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. கோவையில் உள்ள கோயிலில் வைத்து தான் திருமணம் நடந்துள்ளது. காதல் விவகாரம் தெரிந்தால், பிரச்னை ஆகி விடும் என்று பெற்றோர் பார்க்கும் திருமணத்துக்கு சம்மதிப்பது போல் நடித்து, கடைசி நேரத்தில், வீட்டில் இருந்து வெளியேறி காதலனை ஷைனி பிரியா திருமணம் செய்துள்ளார் என கூறப்படுகிறது. மணக்கோலத்தில் உள்ள போட்டோவை போலீசாரிடம் காட்டி, தனது மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக தற்போது புகார் கூறி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post திருமணம் நடக்க இருந்த நிலையில் மாயமான மணப்பெண் காதலனுடன் டும்டும்டும்: மணக்கோலத்தில் வாட்ஸ் அப்பில் போட்டோ அனுப்பினார் appeared first on Dinakaran.

Related Stories: