ஊட்டி பூங்காவில் கரடி முகாம்

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் முகாமிட்ட கரடியால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது வனவிலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, சிறுத்தை, கரடி, காட்டுமாடு, யானை மற்றும் புலி போன்ற வனவிலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. வனவிலங்குகள் உணவு தேடி மக்கள் வசிக்கும் பகுதி வரும்போது மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று இரவு 9.30 மணியளவில் கண்ணாடி மாளிகை அருகே உள்ள ஒரு மரத்தில் பயங்கர சத்தம் கேட்டது. பூங்கா ஊழியர்கள் அங்கு வந்து டார்ச் அடித்து பார்த்தபோது கரடி ஓன்று மரத்தில் ஓய்வெடுத்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கரடியை வனத்திற்குள் விரட்டும் பணியை மேற்கொண்டனர். மாலை 6 மணியுடன் பூங்கா மூடப்பட்ட நிலையில் பயணிகள் யாரும் இல்லை. இதனால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘தாவரவியல் பூங்காவை சுற்றிலும் வனப்பகுதிகள் உள்ளன. இதனால், வனவிலங்குகளின் நடமாட்டம் என்பது இயல்பான ஒன்றுதான். மனித-வனவிலங்கு மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் இவற்றின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மக்கள் அச்சப்படத் தேவையில்லை’’ என்றனர்.

The post ஊட்டி பூங்காவில் கரடி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: