ரயில் நிலையத்தில் டூவீலர் வாகன காப்பக ஒப்பந்ததாரர் அடாவடி: மநீம புகார் மனு

 

விருதுநகர், மே 30: விருதுநகர் ரயில் நிலையத்தில் வாகன காப்பக ஒப்பந்ததாரர்கள் அடாவடி வசூலில் ஈடுபடுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மக்கள் நீதிமய்ய மாவட்டச் செயலாளர் காளிதாஸ், தெற்கு ரயில்வே மண்டல மேலாளரிடம் மனு அளித்தார். மனுவில், விருதுநகர் ரயில் நிலையத்தில் முன் பகுதியில் தங்கள் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரை வரவேற்க செல்பவர்கள் தங்கள் டூவீலரை நிறுத்திவிட்டு பிளாட்பாரம் டிக்கெட் எடுத்து விட்டு உள்ளே செல்கிறார்கள்.

அவ்வாறு நிறுத்தி சென்ற வாகனங்களை எடுத்து செல்ல அவர்கள் வரும் போது டூவீலர்கள் செயினால் கட்டப்பட்டு பூட்டு போடப்பட்டு விடுகிறது. ரயில் நிலைய சைக்கிள் ஸ்டாண்ட்டில் வேலை செய்பவர்கள் டூவீலரை பூட்டிவிட்டு ரூ.20 தந்தால் மட்டுமே வண்டியை எடுக்க விடுவோம் என தகராறு செய்கிறார்கள்.

வாகன காப்பக ஒப்பந்ததாரர் ஏலம் எடுத்திருப்பது வாகன காப்பகத்திற்கு மட்டும்தானே தவிர ஒட்டுமொத்த ரயில் நிலையத்தையும் குத்தகைக்கு எடுத்தது போல் பொதுமக்களிடம் அடாவடியாக இவர்கள் வசூலிக்கின்றனர். இதனால், வாகன காப்பகத்தினருக்கும், பொதுமக்களுக்கும் தேவையற்ற பிரச்சனை ஏற்படுகிறது. எனவே தெற்கு ரயில்வே நிர்வாகமும்,மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு வழிப்பறி கொள்ளை போல வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post ரயில் நிலையத்தில் டூவீலர் வாகன காப்பக ஒப்பந்ததாரர் அடாவடி: மநீம புகார் மனு appeared first on Dinakaran.

Related Stories: