எல்சா 3 கப்பல் விபத்து கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கை: தலைமை செயலாளர் முருகானந்தம் ஆய்வு

சென்னை: எல்சா 3 கப்பல் விபத்தால் கடலோர மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று தலைமை செயலாளர் முருகானந்தம் ஆய்வு செய்தார். தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் கடந்த 24ம் தேதி கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவில் எல்சா 3 என்ற கப்பல் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த எரிபொருள், பிளாஸ்டிக் துகள்கள், ஆபத்தான பொருட்கள் கொண்ட பெட்டகங்கள் கடலில் விழுந்தது.

இதையடுத்து, வலுவடைந்த தென்மேற்கு பருவ மழையின் காரணமாக பிளாஸ்டிக் துகள்கள், பெட்டகங்கள் உள்பட பிற பொருட்கள் கேரள மாநிலத்தின் கடற்கரையிலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையிலும் கரை ஒதுங்கி வருகிறது. இதுதொடர்பாக நேற்று தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் தலைமையில் கடற்கரையில் ஒதுங்கும் பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் பிற பொருட்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.

நேற்று முன்தினம் பிளாஸ்டிக் துகள்கள் கன்னியாகுமாரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையில் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்டதும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்களுக்கும் மற்றும் தொடர்புடைய அனைத்து அரசு துறையினருக்கும் பிளாஸ்டிக் துகள்களை அப்புறப்படுத்துவதற்கான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் வழங்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் பெட்டகங்கள் வானிலை சூழலுக்கேற்ப நகரும் திசை மற்றும் கரை ஒதுங்கக்கூடிய பகுதிகள் குறித்து அறிவியல் வல்லுநர்களின் கருத்து கேட்டறியப்பட்டது. தொடர்ந்து கன்னியாகுமரி கலெக்டர் பிளாஸ்டிக் துகள்களை அகற்ற தன்னார்வலர்கள் மூலம் பாதுகாப்பான முறையில் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகளை ஒருங்கிணைத்து பணிகள் விரைவாக நடந்து வருகிறது. பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கும் மீனவர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

The post எல்சா 3 கப்பல் விபத்து கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கை: தலைமை செயலாளர் முருகானந்தம் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: