* கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
பொள்ளாச்சி: பெண் டாக்டர் முகத்தில் எச்சில் துப்பிய ஆத்திரத்தில் மனவளர்ச்சி குன்றிய வாலிபரை நிர்வாணப்படுத்தி மிளகாய் பொடியை உடலில் தூவி, எறும்புகளை கடிக்க வைத்து 2 நாள் கொடுமைபடுத்திய 11 பேர் கும்பல் பின்னர் கிரிக்கெட் பேட்டால் சரமாரியாக தாக்கி கொன்றது குறித்து பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர். கோவை சோமனூர் அருகே உள்ள மாதப்பூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் வருண்காந்த் (22). இவர், மனவளர்ச்சி குன்றியவர். இதற்காக பொள்ளாச்சி அருகே உள்ள மனநல காப்பகத்தில் அவரை சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர். இந்நிலையில், வருண்காந்த் மாயமானதாக, அவருடைய பெற்றோருக்கு காப்பகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ரவிக்குமார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து வருண்காந்தை தேடி வந்தனர்.
இந்நிலையில் காப்பக நிர்வாகிகள் வருண்குமாரை அடித்துக் கொன்று நடுப்புணி அருகே உள்ள பி.நாகூரில் உள்ள தோட்டத்தில் குழிதோண்டி புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கடந்த 24ம் தேதி வருண்காந்த் சடலத்தை போலீசார் தோண்டி எடுத்தனர். கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் காப்பக நிர்வாகி கிரிராம் (36), நிர்வாகி சாஜியின் தந்தை செந்தில்பாபு (55), காப்பாளர்கள் ரித்தீஷ் (26), சதீஷ் (25), ஷீலா (27), பணியாளர் ரங்கநாயகி (32) ஆகிய 6 பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான சாஜி (32), டாக்டர் கவிதா (52), கவிதாவின் கணவர் லட்சுமணன் (56), மகள்கள் ஸ்ருதி (24), ஸ்ரேயா (26) ஆகிய 5 பேரை 10 நாட்களுக்கு பின்னர் தனிப்படை போலீசார் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கைது செய்தனர். மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேர் மீதும் கொலை செய்தது, கொலையை மறைத்தது, கூட்டு சதி, தடயங்களை அழித்தது என 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
போலீசாரிடம் கைதானவர்கள் அளித்த வாக்குமூலம்:
கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி வருண்காந்தை அவரது பெற்றோர் எங்களது காப்பகத்தில் அனுமதித்தனர். வருண்காந்த் எங்களது பேச்சை கேட்காமல் அதிகமாக கோபப்பட்டார். காப்பக நிர்வாகி டாக்டர் கவிதா முகத்தில் எச்சில் துப்பினார். இதனால் கடந்த 9ம் தேதி அங்குள்ளவர்களை மேட்டுப்பாளையத்திற்கு சுற்றுலா அழைத்துச்சென்றபோது வருண்காந்த்தை மட்டும் காப்பகத்திலேயே விட்டு சென்றோம். இதேபோல் ஒரு பிறந்தநாள் விழாவிற்கும் வருண்காந்தை விட்டுவிட்டு மற்ற குழந்தைகளை அழைத்துச்சென்றோம். இதனால் வருண்காந்த் ஆத்திரமடைந்து, எங்களை பார்த்து கூச்சல் போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் அவரை பயங்கரமாக தாக்கினோம். இதன் பின்னர் அவர் சரிவர சாப்பிடவில்லை.
இதன்பின்னர் அவரை அரை நிர்வாணமாக்கி உடலில் சர்க்கரையை தூவி எறும்பை விட்டு கடிக்க செய்து, மிளகாய்களை வாயில் திணித்து, கிரிக்கெட் பேட் மற்றும் ஸ்டெம்பால் தாக்கினோம். இதில் மயங்கி விழுந்த வருண்காந்த் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக் கூடாது என்று ஊழியர்களை மிரட்டினோம். அவர்களது செல்போனை வாங்கி சுவிட்ச்-ஆப் செய்து வைத்துக் கொண்டோம். கொலையை மறைப்பதற்காக, அவரது உடலை காரில் ஏற்றி நடுப்பணியில் உள்ள கவிதாவின் தோட்டத்திற்கு கொண்டு சென்று அங்கு குழிதோண்டி புதைத்து, அதன்மேல் செடிகளை நட்டுவித்தோம். இதையடுத்து கொலை சம்பவத்தை மறைக்க வருண்காந்தை ஆழியாருக்கு அழைத்து சென்றதாகவும், அங்கு காணாமல் போனதாகவும் நாடகமாடினோம். ஆனால் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர்.
The post காப்பக பெண் டாக்டர் முகத்தில் எச்சில் துப்பியதால் ஆத்திரம்: மனவளர்ச்சி குன்றிய வாலிபர் கிரிக்கெட் பேட்டால் அடித்துக்கொலை appeared first on Dinakaran.