பழனி, குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு!!

சென்னை : பழனி, குன்றத்தூர் உள்ளிட்ட 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“சிறப்புநிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த அதன் ஆண்டு வருவாய் ரூ.15 கோடிக்கு மேலாகவும், தேர்வுநிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த ரூ.15 கோடி வரையிலும், முதல்நிலை நகராட்சியாக நிலை உயர்த்த ரூ.9 கோடி வரையிலும், இரண்டாம் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த ரூ.6 கோடிக்கு மிகாமலும் வருவாய் அளவு இருக்க வேண்டும்.

ஆண்டு வருவாய் அடிப்படையில், திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேஸ்வரம், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோயில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகிய நகராட்சிகளைத் தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. மாநில அரசு நிர்ணயித்துள்ள வருவாய் அளவுக்கு உட்பட்டு அந்த நகராட்சிகள் இருப்பதால் அவை தரம் உயர்த்தப்படுகின்றன.

திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி ஆகிய மூன்று தேர்வு நிலை நகராட்சிகள் சிறப்பு நிலை நகராட்சிகளாகவும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேசுவரம் ஆகிய முதல்நிலை நகராட்சிகள் தேர்வு நிலை நகராட்சிகளாகவும், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோவில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகிய இரண்டாம் நிலை நகராட்சிகள் முதல்நிலை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்படுகின்றன. இதற்கான பரிந்துரைகளை அரசுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநரகம் அளித்துள்ளது”, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பழனி, குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: