திருச்சி, மே 29: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்டம் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் வாயிலாக விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் சார்ந்த பயிற்சிகள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம், சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து வரும் மே 29ம் தேதி முதல் ஜூன் 12 வரை இவ்வியக்கத்தை மாவட்டத்திலுள்ள 14 வட்டாரங்களிலும், கிராமம் தோறும் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கக்கூடிய வகையில் அனைத்து தொழில்நுட்பங்களையும் எடுத்துச் செல்ல உள்ளனர். இப்பிரச்சார இயக்கத்தின் துவக்க நிகழ்ச்சி இன்று (மே 29) வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பாபு தலைமையில், முசிறி வேளாண்மை உதவி இயக்குனர் முன்னிலையில் பெரமங்கலம் கிராமத்தில் நடைபெறுகிறது.
வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள் புனிதவதி, முசிறி வட்டாரம் அய்யம்பாளையம், துறையூர் வட்டாரம் கொல்லப்பட்டி ஆகிய கிராமங்களில் சகிலா முசிறி வட்டாரம் ஆவூர், வீரமணிபட்டி ஆமூர், T. புதுப்பட்டி, T. பேட்டை கிராமங்களில் ஈஸ்வரன் ஆகியோரும் முகாமிட்டு விவசாயிகளுக்கு புதிய வேளாண் தொழிலிநுட்பங்கள், மத்திய, மாநில திட்டங்கள் குறித்து விளக்கவுள்ளனர். இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதை தொடர்ந்து மே 30 அன்று முதல் குழு முத்தம்பட்டி, சேர்குடியிலும், 2ம் குழு சிட்டிலரை, மாவிலிபட்டியிலும், 3ம் குழு தும்பலம், பைத்தம்பாறையிலும், மே 31 அன்று முதல் குழு பெட்டவாய்த்தலை, எஸ்.புதுக்கோட்டை, பெரிய கருப்பூரிலும், 2ம் குழு பெருகமணி, கொடியாலம், குழுமணியிலும், 3ம் குழு திருப்பாறைத்துறை, சிறுகமணியிலும், ஜூன் 1ம் தேதி முதல் குழு நாகமங்கலம், கிளிக்கூடு, கிளியநல்லூரிலும், 2ம் குழு அழுந்தூர், பனையபுரத்திலும், 3ம் குழு சேதுராபட்டி, அந்தநல்லூரிலும், ஜூன் 2ம் தேதி முதல் குழு தாளக்குடி, திருப்பட்டூரிலும், 2ம் குழு அப்பாதுரை, சிறுமயங்குடியிலும்,3ம் குழு எசனக்கோரை, நெய்க்குப்பை, மகிழம்பாடியிலும் நடைபெறும். எனவே விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜா பாபு கேட்டுக்கொண்டுள்ளார்.
The post சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம்: இன்று துவங்கி ஜூன் 12வரை நடக்கிறது appeared first on Dinakaran.