ஐபிஎல் பைனலுக்கு செல்ல போவது யார்? பஞ்சாப்-பெங்களூரு இன்று பலப்பரீட்சை

சண்டிகர்: கடந்த ஒன்றரை மாதத்திற்கும் மேலாக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்த 18வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்ெதாடரில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா, 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. தொடக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெல்லி அணியும், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது. லீக் சுற்றின் முடிவில் தலா 19 புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களை பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு அணிகள் பிடித்தன. 18 புள்ளிகளுடன் குஜராத் அணி 3வது இடத்தையும், 16 புள்ளிகளுடன் மும்பை அணி 4வது இடத்தையும் உறுதி செய்தன.

ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு பிளே ஆப் சுற்று இன்று தொடங்குகிறது. சண்டிகரில் இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பஞ்சாப்-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும். தோல்வியடையும் அணி, நாளை (30ம் தேதி) நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் ஜூன் 1ம் தேதி மோதும். அதில் வெற்றி பெறும் அணி, 2வது அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும். இதற்கு முன்பு கடந்த 2014ம் ஆண்டு இறுதி போட்டியில் விளையாடிய பஞ்சாப் அணி, தற்போது ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. பைனலில் வெற்றி பெற்று
கோப்பையை வெல்ல போராடும். எனவே, இன்றைய போட்டியில் பெங்களூருவை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் பஞ்சாப் கிங்ஸ் அணி முனைப்பு காட்டும்.

மறுபுறம் 18 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் பெங்களூரு அணி, இந்த முறை எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. கடந்த 2009, 2011 மற்றும் 2016 சீசன்களில் இறுதி போட்டிக்கு முன்னேறியும், கோப்பையை தவற விட்ட பெங்களூரு அணி, இந்த முறை தனது கனவை நிறைவேற்றி கொள்ள முனைப்பு காட்டும். நடப்பு சீசனில், இரு அணிகளும் ஆடிய 2 ஆட்டங்களில், முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

வெளியூரில் நாங்கதான் கிங்;
* பெங்களூரு அணி இந்த சீசனில் வெளியூர்களில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு சீசனில் வெளியூர்களில் விளையாடிய அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் அணி என்ற மகத்தான சாதனையை பெங்களூரு படைத்துள்ளது.
* இந்த போட்டியில் விராட் கோலி 54 ரன்கள் எடுத்ததன் மூலம் ஆர்.சி.பி. அணிக்காக விராட் கோலி 9000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

சென்னை 10ம் இடம் வரலாற்றில் முதல்முறை;
புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வெற்றிகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளது. ஒரு சீசனில் பத்தாவது இடத்தை சென்னை அணி பிடிப்பது இதுவே முதல்முறை. அதே போல ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி தொடர்ந்து இரண்டு முறை பிளே ஆப்க்கு தகுதி பெறாமல் இருப்பதும் இதுவே முதல்முறை.

ரிஷப் பண்ட்க்கு ரூ.30 லட்சம் அபராதம்;
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மெதுவாக பந்து வீசியது. இதற்காக லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு அணி மெதுவாக பந்து வீசினால் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஆனால், லக்னோ இந்த சீசனில் 3 முறை மெதுவாக பந்து வீசி உள்ளது. இதனால், கேப்டன் பண்ட்-க்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு அணியாக 3 முறை மெதுவாக செயல்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த அணிக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லக்னோ அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெற்ற வீரர்களுக்கு (இம்பேக்ட் வீரர் உட்பட) தலா ரூ.12 லட்சம் அல்லது போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

The post ஐபிஎல் பைனலுக்கு செல்ல போவது யார்? பஞ்சாப்-பெங்களூரு இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Related Stories: