டெல்லி: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘புதிய கல்விக் கொள்கையின் கீழ், மாணவர்கள் தங்கள் தாய்மொழி உட்பட பல மொழிகளை கற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதற்காக மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். அதன் மூலம் மாணவர்களின் அறிவாற்றல் மற்றும் தொழில்முறை திறன்களை வளர்க்க முடியும். பன்னாட்டு நிறுவனங்களில், தகவல் தொடர்பு மற்றும் கலாசார புரிதலை மேம்படுத்த உதவும். இந்திய இளைஞர்களை உலகளாவிய வேலைவாய்ப்பு சந்தையில் முன்னிலைப்படுத்தும். மொழி பன்முகத்தன்மை தான் இந்தியாவின் பெரும் பலமாக உள்ளது.
இதை மாணவர்கள் தங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவதன் மூலம், மாணவர்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழிகளை கற்க வாய்ப்பு வழங்கப்படும். இதன்மூலம் மாணவர்கள் பல்துறை திறன் கொண்டவர்களாக மாறுவார்கள். மேலும், மொழி அறிவு மூலம் பெறப்படும் தகவல் தொடர்பு திறன், தொழில்நுட்பம், வணிகம், சேவைத் துறைகளில் இந்திய இளைஞர்களுக்கு முக்கிய முன்னுரிமையை அளிக்கும்’ என்று கூறினார். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழி கொள்கையை தமிழ்நாடு மட்டுமின்றி பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநிலங்களும் எதிர்த்து வருகின்றன.
இந்த நிலையில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பள்ளிகளில் மும்மொழி கொள்கையை செயல்படுத்துவதை மீண்டும் வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்க்கும் நிலையில் மும்மொழிக் கொள்கை மீண்டும் வலியுறுத்தும் ஒன்றிய அமைச்சர் appeared first on Dinakaran.