பெரம்பலூர், மே 26: பாளையம் கிராமத்தில் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு சிறிய அளவிலான சப்பர பவனி நடைபெற்றது.
பாளையம் புனித ஆரோக்கிய மாதா கோயில் தெருவின் தென் பகுதியில் புனித செபஸ்தியார் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி புனித யோசேப்பு பேராலயத்தின் பங்கு குரு ஜெயராஜ் தலைமையில், புனித ஆரோக்கிய மாதா கோயில் வளாகத்தில் சிறப்பு பாடல் திருப்பலி நடைபெற்றது. முன்னதாக பாளையம் பங்கு குரு அருட்திரு ஜெயராஜ் தலைமையில், புனித செபஸ்தியார் கோயிலில் இருந்து, புனித ஆரோக்கிய மாதா கோயிலுக்கு புனித செபஸ்தியாரின் சொரூபம் தாங்கிய சிறிய அளவிலான சப்பரபவனி, மின் விளக்கு மற்றும் பூக்கள் அலங்காரத்தில் நடைபெற்றது.
இந்த சப்பர பவனியின் போது, அருட் சகோதரிகள், அன்பியம் குழுவினர், இளைஞர் மன்றத்தினர் ஜெபமாலை ஜெபித்தபடி பாடல்களைப் பாடி வந்தனர். இந்த புனித செபஸ்தியார் திருவிழாவில் பாளையம் கிராம மக்கள் மட்டுமின்றி, பெரம்பலூர், ரெங்கநாதபுரம், குரும்பலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த புனித செபஸ்தியார் பக்தர்கள் இறை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
The post பாளையம் கிராமத்தில் செபஸ்தியார் ஆலய சப்பர பவனி appeared first on Dinakaran.