ராயக்கோட்டை, மே 26: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதிகளான பாலினூர் தோட்டம், காடுசெட்டிப்பட்டி, குளிக்காடு, நெல்லூர், தின்னூர் போன்ற பகுதிகளிலும், கிருஷ்ணகிரி அணை பகுதிகளிலும் ஏராளமான விவசாயிகள் குண்டு மல்லிப்பூ தோட்டங்களை உருவாக்கி பராமரித்து சாகுபடி செய்து வருகின்றனர். காய்கறிகளுக்கு அடுத்து ராயக்கோட்டையில், பூக்கள் சாகுபடி பிரதானம். சாமந்தி, ரோஜா பூக்கள், மற்றும் அரளி, சம்பங்கி மற்றும் குண்டுமல்லி பூக்களை விவசாயிகள் அதிகம் பயிரிடுகின்றனர். நல்ல முகூர்த்த நாட்களில் குண்டு மல்லிப்பூ கிலோ ரூ.1500க்கு மேலாக விற்பனையாகிறது. சித்திரை மாத தொடக்கத்தில் அனைத்து அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் நடந்து வந்தது. இதனால் அனைத்து பகுதிகளில் பூக்கள் விற்பனை கனஜோராக இருந்தது.
தற்போது முகூர்த்தம் மற்றும் கோயில் விழாக்கள் இல்லாததால் கிலோ ரூ250க்கும் குறைவாகவே விற்பனையாகிகிறது. விழாக்கள் இல்லாத நாட்களில், சென்ட் தயாரிக்கும் நிறுவனத்தினர் மல்லிகை பூ கிலோ ரூ.300 வரை வாங்கிச் செல்கின்றனர். அதே போல் மழை நாட்களில் விலை குறைந்து விற்பனையானதாகவும், இப்போது மழை இல்லாததால் கிலோ ரூ.500 வரை விற்பனையாகும் நிலையில், பூவை பறிக்க கூலி ஆட்கள் கிடைப்பதில்லை என்று கூறுகின்றனர். இருப்பினும் இருக்கும் ஆட்களை வைத்து பூப்பறிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
The post ராயக்கோட்டை பகுதியில் குண்டுமல்லி பூக்கள் விலை சரிவு: கிலோ ரூ.250க்கு விற்பனை appeared first on Dinakaran.