சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அளித்த பேட்டி: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடத்தப்படுகிறது. இதில், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யான் கலந்து கொள்கிறார். ஒரே நாடு, ஒரே தேர்தல் எந்த அளவிற்கு மக்களுக்கு பலன்களை தரும், தேர்தல் செலவுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது, நிலையான அரசு என பல்வேறு கருத்துகள் கருத்தரங்களில் முன்வைக்கப்படும்.
நான் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற்று பேச வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியிருக்கிறார். தேர்தல்களை நாங்கள் எப்படி அணுகுகிறோமோ, அதேபோல் அமைச்சர் சேகர்பாபுவும் அணுக வேண்டும். தமிழகத்தில் பாஜ வளர்ந்து வருகிறது. சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு வினாத்தாளில் சாதி பெயருடன் பெரியார் பெயர் இடம் பெற்றிருந்தது அதிகாரிகள் தவறு. அதை நான் ஏற்கவில்லை. இந்த தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுவது. பெரியார் நாடு முழுவதும் எவ்வாறு அறியப்பட்டிருக்கிறார் என்பதை குறிக்கும் வகையில் வினா இடம் பெற்றிருக்கிறது. இது ஒன்றிய அரசின் திணிப்பு என கூறுவது தவறு. நிதி பகிர்வு குறித்து முதல்வர் கோரிக்கை வைப்பதற்கு உரிமை உள்ளது.
The post சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு வினாத்தாளில் சாதி பெயருடன் பெரியார் பெயர் இடம்பெற்றது அதிகாரிகள் தவறு: தமிழிசை பேட்டி appeared first on Dinakaran.