சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2024-2025ம் ஆண்டு முதல் பஞ்சாயத்து பகுதிகளில் புதிதாக வீடு கட்டியவர்கள் மற்றும் வீடு கட்ட திட்டமிட்டுள்ளவர்கள், வீட்டின் கட்டுமான பரப்பை அளந்து வரி நிர்ணயம் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த புதிய சட்டத்தின்படி ஒரு சதுர அடிக்கு கட்டிட வரைபட கட்டணமாக சுமார் 37 ரூபாய் செலுத்த வேண்டும்.
மேலும், 2024-2025ம் ஆண்டுவரை ஓலைக் குடிசை ஒன்றுக்கு ரூ.44ம், ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீடு ஒன்றுக்கு ரூ.66ம், கான்கிரீட் வீடு ஒன்றுக்கு ரூ.121ம் வீட்டு வரியாக செலுத்தி வந்தனர். மேலும், வீட்டு வரி ரசீதில் வீட்டின் பரப்பளவு குறிப்பிடப்பட்டிருக்கும். தற்போது, உயர்த்தப்பட்ட சொத்து வரியின்படி, 2025-2026 முதல், இனி ஓலைக் குடிசைகளுக்கு அதிகபட்சமாக சதுர அடி ஒன்றுக்கு 40 பைசா முதல் 1 ரூபாய் வரையும், ஓட்டு வீட்டிற்கு சதுர அடி ஒன்றுக்கு 30 பைசா முதல் 60 பைசா வரையும், கான்கிரீட் வீட்டிற்கு சதுர அடி ஒன்றுக்கு 50 பைசா முதல் 1 ரூபாய் வரையும், வீட்டு வரி உயர்த்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு உள்ளாட்சிகளுக்கு உத்தரவு வழங்கியுள்ளது.
இதன்படி, இனி ஊராட்சிகளில் அதிகபட்சமாக 500 சதுர அடி கான்கீரிட் வீடுகளுக்கு ரூ.500ம், ஓட்டு வீடுகளுக்கு ரூ.300ம், ஓலை வீடுகளுக்கு ரூ.200ம் வீட்டுவரி வசூலிக்கப்படும். பஞ்சாயத்து பகுதிகளுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரிகளை உயர்த்தி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். பஞ்சாயத்து பகுதிகளுக்கு உயர்த்தப்பட்ட வீட்டு வரிகளை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
The post பஞ்சாயத்து பகுதிகளுக்கு உயர்த்தப்பட்ட வீட்டு வரிகளை திரும்பப்பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை appeared first on Dinakaran.