டிரம்ப் அரசு நடவடிக்கை ஹார்வர்டு பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை: இந்திய மாணவர்கள் சுமார் 800 பேருக்கு பாதிப்பு

நியூயார்க்: ஹார்வர்டு பல்கலைக்கழகம் வௌிநாட்டு மாணவர்களை சேர்ப்பதற்கான அங்கீகாரத்தை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக சுமார் 800 இந்திய மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக வளாகத்தில் அமெரிக்க எதிர்ப்பு, தீவிரவாத ஆதரவு நடவடிக்கைகளில் வெளிநாட்டு மாணவர்கள் ஈடுபடுவதற்கு நிர்வாகம் அனுமதி அளிப்பதாக அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.

இந்நிலையில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதற்கான அங்கீகாரத்தை அதிபர் டிரம்ப் அரசு ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கையின் காரணமாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் உள்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் கிறிஸ்டி நியோம் ஹார்வர்டு பல்லைக்கழகத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தில், “உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலமாக 2025-2026ம் கல்வியாண்டுக்கான எப் அல்லது ஜே அல்லாத குடியேற்ற விசா அந்தஸ்தில் உள்ள நபர்களை ஹார்வர்டு பல்கலைக்கழகம் வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தங்களது குடியேற்ற அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்வதற்கு வேறு பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை மூலமாக பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது பல்கலைக்கழகத்தில் உலகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 10,158 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஹார்வர்டு புள்ளிவிவரங்களின்படி இந்தியாவை சேர்ந்த சுமார் 788 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறக்கூடிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அதிபர் ஜோ பைடனின் முன்னாள் ஆலோசகர் அஜய் புடோரியா கூறுகையில், “இந்திய மாணவர்கள் அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் 9 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் பங்களிக்கின்றனர். அரசின் இந்த கொள்கையானது இந்திய மாணவர்களை நேரடியாக அச்சுறுத்துகிறது.

இந்த மாணவர்கள் தங்களது கனவுகள், நிதி மற்றும் எதிர்காலத்தை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதலீடு செய்துள்ளனர். அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட தாக்குதல்களால் அவர்களின் ஆசைகள் சிதைந்துவிட்டன. ஒத்துழைப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிக முக்கியமானதாக கருதப்படும் இந்த நேரத்தில் அமெரிக்க-இந்திய உறவுகளை பலவீனமடைய செய்கிறது. மாணவர்களின் உரிமைக்காக நாம் போராட வேண்டும்” என்றார்.

The post டிரம்ப் அரசு நடவடிக்கை ஹார்வர்டு பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை: இந்திய மாணவர்கள் சுமார் 800 பேருக்கு பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: