மலர் கண்காட்சியில் அமைக்கப்பட்ட அலங்காரங்களில் வாடிய மலர்களை மாற்றி புதிய பூக்கள் அமைக்கும் பணிகள் தீவிரம்

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சி கடந்த 15ம் தேதி துவங்கியது. இந்த மலர் கண்காட்சி வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. மலர் கண்காட்சியை காண நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில், பண்டைய தமிழ் அரசர்களின் வாழ்வியல் முறைகளை வெளிக்காட்டும் வகையிலும், சிறுவர்களைக் கவரும் வகையிலும் 70 அடி நீளம், 20 அடி உயரத்தில் பிரம்மாண்டமான அரண்மனை நுழைவு வாயில் வடிவமைப்பு 1 லட்சத்து 30 ஆயிரம் மலர்களால் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 75 அடி நீளம், 25 அடி உயரத்தில் கார்னேசன், ரோஜா, சாமந்தி போன்ற 2 லட்சம் மலர்களால் ஆன பண்டைய அரசர் கால அரண்மனை பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 8 அடி உயரம் 35 அடி நீளம் கொண்ட அன்னபட்சி 50,400 சாமந்தி மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

4 ஆயிரம் மலர்த் தொட்டிகள் மற்றும் 35 ஆயிரம் சாமந்தி, ரோஜா மலர்களால் கல்லணை மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பூங்காவின் பல்வேறு பகுதிகளில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பண்டைய கால சிம்மாசனம், ஊஞ்சல், கண்ணாடி, இசைக்கருவிகள், பீரங்கி, யானை, புலி, சதுரங்க அமைப்பு போன்ற பல்வேறு மலர் அலங்கார வடிவமைப்புகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர நுழைவு வாயில் பகுதியில் 3 அலங்கார வளைவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது ஊட்டியில் நாள் தோறும் மழை பெய்து வரும் நிலையில், மலர் கண்காட்சி துவங்கி 8 நாட்கள் ஆன நிலையில், இந்த மலர் அலங்காரங்களில் வைக்கப்பட்டுள்ள ஒரு சில மலர்கள் அழுகி உதிர துவங்கியுள்ளன.

மேலும், மூன்று நாட்கள் மலர் கண்காட்சி நடக்கும் நிலையில், மலர் அலங்காரங்கள் பொலிவுடன் காட்சி அளிக்கும் வகையில் தற்போது வாடிய மலர்களை மாற்றும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது பல்வேறு வண்ணங்களை கொண்ட ரோஜா மலர்களை கொண்டு இந்த மலர் அலங்கரங்களில் புதிய மலர்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதனால், பூங்காவில் உள்ள அனைத்து மலர் அலங்காரங்களும் பொலிவுடன் காட்சியளிக்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

இம்மாதம் இறுதி வரை இந்த மலர் அலங்காரங்கள் வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளதால், தொடர்ந்து ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர் அலங்காரங்களை கண்டு ரசித்து செல்லலாம்.

The post மலர் கண்காட்சியில் அமைக்கப்பட்ட அலங்காரங்களில் வாடிய மலர்களை மாற்றி புதிய பூக்கள் அமைக்கும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: