தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு 934 இடங்களில் 5,52,349 பறவைகள் இருப்பதாக கணக்கீடு: வன பாதுகாவலர் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:பறவைகள், சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கும் உயிரினம் ஆகும். எனவே, பறவை இனப்பன்மையை பாதுகாக்கவும், அவற்றின் வாழ்விடங்களை பேணவும், தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட இடங்களில் (ஈர நிலங்கள் மற்றும் நிலப்பகுதிகள்) மிகப்பெரிய அளவில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு 2023ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இடம் பெயரும் பறவைகள் பருவம், வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபரில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை தொடர்கிறது. பறவைகளின் பல்வேறு வாழ்விடங்களில் மாநில அளவிலான கண்காணிப்பு பயிற்சியும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு வனத்துறையால் நடத்தப்படுகிறது.அதன்படி, 2025ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் கட்டமாக, ஈர நிலப் பறவைகள் (உள்நாட்டு மற்றும் கடலோர ஈர நிலங்கள்) மார்ச் 8 மற்றும் 9 ஆகிய தினங்களிலும், இரண்டாவது கட்டமாக நிலப்பகுதி பறவைகள் (பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு உள்ளேயும் வெளியேயும்) மார்ச் 15 மற்றும் 16 மார்ச் ஆகிய நாட்களில் நடத்தப்பட்டது.

இந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு, அழிந்து வரும் பறவைகள் மற்றும் இரவு நேர பறவைகளை ஆவணப்படுத்துவதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்தது. இந்த கணக்கெடுப்பில், தமிழ்நாட்டில் அழிந்து வரும் 37 பறவை இனங்களில், 26 இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 17 இரவு நேர பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 934 இடங்களில் ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 397 பறவை இனங்களை சேர்ந்த 5,52,349 பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.

இவற்றில், 1,13,606 பறவைகள் இடம்பெயரும் பறவைகள் மற்றும் 49% பறவைகள் கடலோர மாவட்டங்களை சேர்ந்தவை. சின்னக்கொக்கு/கள்ளவாயன், சிறிய நீர்க்காகம், நத்தைகுத்தி நாரை, கருந்தலை அரிவாள்மூக்கன், அன்றில் மற்றும் குளக்கொக்கு ஆகியவை வசிக்கும் பறவைகளில் மிகவும் பொதுவான பறவைகளாக காணப்பட்டன. சாம்பல்நிற வாத்து, பெரும் பூநாரை, பெரியகோட்டான், கோணமூக்கு உள்ளான், சிறிய கொண்டை ஆலா மற்றும் கரண்டிவாயன் ஆகியவை புலம்பெயர்ந்த பறவைகளில் மிகவும் பொதுவான பறவைகளாக காணப்பட்டன.

1,093 இடங்களில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 401 பறவை இனங்களைச் சேர்ந்த 2,32,519 பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளன. இதில், 1,13,606 பறவைகள் புலம்பெயர்ந்த பறவைகளாக இருந்தன. வீட்டுக்காக்கை, நாகணவாய், பச்சைக்கிளி, சின்னான் (அ) செம்புழை கொண்டலாத்தி, தவிட்டு குருவி / பூனியல் குருவி, பனை உழவாரன், கறுங்கரிச்சான், சின்னக்கொக்கு/கள்ளவாயன், இந்திய மயில், புள்ளிப்புறா ஆகியவை மிகவும் பொதுவான பறவைகளாக காணப்பட்டன.

The post தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு 934 இடங்களில் 5,52,349 பறவைகள் இருப்பதாக கணக்கீடு: வன பாதுகாவலர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: