பிரதமர் தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்: தமிழ்நாட்டிற்கான நிதியை விடுவிக்க வலியுறுத்த பேசுகிறார்

சென்னை: பிரதமர் மோடி தலைமையில் நாளை டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி செல்கிறார். இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கான நிதியை வலியுறுத்தி பேச திட்டமிட்டுள்ளார்.ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக்குழு கூட்டம் நடத்தப்படும்.

இந்த கூட்டத்தில், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். அந்த வகையில், நிதி ஆயோக்கின் இந்த ஆண்டுக்கான (2025) கூட்டம் நாளை (24ம் தேதி) காலை 10 மணிக்கு டெல்லியில் நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதம் முறையாக ஒன்றிய அரசு சார்பில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த அழைப்பை ஏற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தாண்டு பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை 9.50 மணிக்கு சென்னையில் இருந்து பயணிகள் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிற்பகல் டெல்லி சென்றடையும் முதல்வரை, தமிழக எம்பிக்கள் வரவேற்கிறார்கள். பின்னர் இன்று டெல்லியில் சில முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். இன்று இரவு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் முதல்வர், நாளை காலை அங்கிருந்து புறப்பட்டு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அப்போது, தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் நிலுவையில் உள்ள நிதிகளை விடுவிக்க பிரதமரிடம் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.

ஒன்றிய பட்ஜெட்டில் பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுதை கண்டித்தும், தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் கடந்தாண்டு நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருப்பது விவாத பொருளாகி உள்ளது.

இதுகுறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்வரின் டெல்லி பயணத்தை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பதிலடி கொடுத்து இருந்தார். அதில், ‘‘தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24ம் தேதி டெல்லி செல்கிறேன். சசிகலா முதல் அமித்ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் ஊர்ந்து சென்று காலை பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு நான் டெல்லி செல்வது கண்டு ஏன் வலிக்கிறது? ‘பா.ஜ.வுடன் கூட்டணி கிடையாது’ என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் ‘புலிகேசி’யாக மாறி ‘வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற’ பழனிசாமி என்னை பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாக பேச நா கூசவில்லையா? கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியை போராடி பெறுவேன்” என்று கூறி இருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசுக்கு கல்வி நிதியை விடுவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், தமிழ்நாடு அரசுக்கு நியாயமாக தர வேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை ஒன்றிய அரசு தரவில்லை என்றும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால்தான் நிதி தரப்படும் என்று ஒன்றிய அரசு சொல்வது ஏற்புடையது இல்லை என்றும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பலமுறை கடிதம் எழுதி இருந்தார். அதில், ‘பி.எம். மற்றும் சமக்ர சிக் ஷா அபியான் திட்டங்களுக்கான நிதியை விடுவிக்க வேண்டும்’ என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேச உள்ளார். கூட்டத்தில், தமிழகத்திற்கு தர வேண்டிய கல்விக்கான நிதி மற்றும் தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசவும் அவர் திட்டமிட்டுள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, நாளை இரவு 10.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

The post பிரதமர் தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்: தமிழ்நாட்டிற்கான நிதியை விடுவிக்க வலியுறுத்த பேசுகிறார் appeared first on Dinakaran.

Related Stories: