டாஸ்மாக்கில் ரெய்டு நடத்தியது வரம்பு மீறிய செயல் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு: கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்து விட்டதாக கடும் கண்டனம்

புதுடெல்லி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை சோதனைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டது. சென்னையில் டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்தியது வரம்பு மீறிய செயல் என்றும், கூட்டாட்சித் தத்துவம் சிதைக்கப்பட்டுள்ளது என்றும் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பெஞ்ச் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை மூன்று நாட்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்தது. அமலாக்கத்துறையின் இந்த திடீர் சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு அரசு தனிதனியாக வழக்குகளை தாக்கல் செய்தன.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம், “ டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, 2017 முதல் 2024 வரை பதிவு செய்யப்பட்ட, 41 முதல் தகவல் அறிக்கைகள் அடிப்படையில்தான், அமலாக்கதுறை சோதனை நடத்தப்பட்டது. அதற்கு சட்டத்திலும் இடம் உள்ளது. எந்த வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடத்துகிறோம் என்பதை, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனக்கூறி இரண்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து, டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணையை தொடர்ந்தது.

இதற்கிடையே உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “டாஸ்மாக் நிர்வாகம் என்பது அரசு சார்ந்தது. அதில் அமலாக்கத்துறை தரப்பில் சோதனை நடத்த வேண்டும் என்றால் அரசிடம் முன்கூட்டியே காரணத்தை தெரிவிக்க வேண்டும்.

அதனை விடுத்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது சட்டவிரோதம். எனவே இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்வது மட்டுமில்லாமல், அமலாக்கத்துறை சோதனைக்கும் தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தது. மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர் வாதத்தில், “டாஸ்மாக்கில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பல தனி நபர்கள் பணம் பெற்றது தொடர்பாக தமிழ்நாடு அரசு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் தற்போது அமலாக்கத்துறையினர் விசாரணை என்ற பெயரில் தங்கள் வரம்பை மீறி செயல்பட்டு வருகின்றனர். ஒரு அலுவலகத்தில் அத்துமீறி அதன் செயல்பாட்டை முடக்கும் விதமாக கணினி, பென்டிரைவ், மொபைல் போன் உள்ளிட்ட அனைத்தையும் முடக்கி உள்ளனர்.

தனிப்பட்ட நபர்கள் செய்த குற்றத்திற்காக அவர்கள் மீது தமிழ்நாடு அரசே நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அமலாக்கத்துறை டாஸ்மாக் அலுவலகத்துக்கு வந்து இதுபோன்று விசாரணை நடத்துவது எந்த வகையிலும் ஏற்கக்கூடியது கிடையாது. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.  இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ, “டாஸ்மாக் விவகாரத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது. அதுகுறித்த விவரங்களை உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது தெரிவித்தோம்” என்று கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் அமர்வு, “டாஸ்மாக் முறைகேடு விவகாரங்களில் தனிநபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யலாம். ஆனால் ஒரு நிறுவனதுக்கு எதிராக எவ்வாறு வழக்கு பதிவு செய்ய முடியும்? என கேள்வி எழுப்பியது. மேலும், “இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி உள்ளது. மூல குற்றத்தில் பணமோசடி அல்லது பயங்கரவாதத்துக்கு நிதி அளித்தல் போன்றவை எங்கே நடந்துள்ளது. ஆதாரத்தை காட்டுங்கள் பார்ப்போம்.

உங்களது சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தி உள்ளீர்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது என்பது வரம்பு மீறிய செயல். இதுபோன்ற நடவடிக்கைகள் அமலாக்கத்துறையின் அதிகார வரம்புக்குள்ளும் அடங்காது. இது கூட்டாட்சி தத்துவத்தையே சிதைக்கும் செயல். எனவே இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கிறது. மேலும் டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை என்பது உட்பட இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதிக்கிறது” என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறைக்கு பிறகு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

 

தலைமை நீதிபதி அதிருப்தி

டாஸ்மாக் தொடர்பான வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்த போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜராகி இருந்த கூடுதல் சொலிசிட்டரை பார்த்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ‘‘அமலாக்கத்துறை தனது அதிகார எல்லையை மீறியுள்ளது என்று தொடர்ந்து மூன்று முறை எச்சரிக்கை விடுக்கும் வகையில் கடும் அதிருப்தியை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post டாஸ்மாக்கில் ரெய்டு நடத்தியது வரம்பு மீறிய செயல் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு: கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்து விட்டதாக கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: