இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது. தவிர, ஜவுளி குடோன்களிலும் ஜவுளி விற்பனை நடைபெறுவது வழக்கம்.
தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளி சந்தைக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து, ஜவுளி கொள்முதல் செய்து செல்வார்கள்.
இந்த நிலையில், இந்த வார ஜவுளி சந்தை நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று இரவு வரை நடைபெற்றது. தற்போது கோடைக்காலத்தையொட்டி, காட்டன் ரக துணிகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்றது. தவிர, இந்த ஆண்டு பள்ளி சீருடைகள் நிறம், டிசைன் போன்றவற்றின் மாற்றத்தால், தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் பள்ளி சீருடை ஜவுளி ரகங்களை அதிக அளவில் வாங்கி சென்றனர்.
அதேபோல, பள்ளி திறக்க இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், பொதுமக்களும் தங்கள் குழந்தைகளுக்கு அதிக அளவில் சீருடைகள் வாங்கி சென்றனர். மேலும், கோடைக்காலமும் தொடர்வதால் காட்டன் ரக துணிகள் விற்பனையும் ஓரளவு நடைபெற்றது.
இதனால், இந்தவார ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை சுமார் 40% அளவில் நடைபெற்றது.
அதே நேரம், வெளியூர் வியாபாரிகள் வருகை இல்லாததால் மொத்த வியாபாரம் சுமார் 20% வரை மட்டுமே நடைபெற்றதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post ஈரோடு ஜவுளி சந்தையில் பள்ளி சீருடைகள் விற்பனை அதிகரிப்பு appeared first on Dinakaran.