முறையாக குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் சாலை மறியல்: தேவாரம் பகுதியில் பரபரப்பு

தேவாரம், மே 21: தேவாரம் பகுதியில் லோயர் கேம்ப் கூட்டுக் குடிநீரை முறையாக வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேவாரம் பேரூராட்சி வளர்ந்து வரும் முக்கிய பேரூராட்சிகளில் ஒன்றாக உள்ளது. நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள் தொகையின் அடிப்படையில், இங்கு குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. குறிப்பாக லோயர் கேம்ப் கூட்டுக்குடி திட்டத்தின் மூலமாக இங்கு உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அவ்வப்போது இங்கு வரக்கூடிய தண்ணீர் பல்வேறு தடங்கல்களால் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில், 6வது வார்டு பெருமாள்பட்டி, காந்தி நகர், ஆசாரிமார், பிள்ளைமார், தெருக்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு லோயர் கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக விநியோக செய்யப்படும் தண்ணீர் 10 நாட்களாக வரவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து, அப்பகுதி மக்கள் லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீரை முறையாக வழங்கக்கோரி நேற்று தேவாரம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள சாலையில் திடீரென காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போடி, உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், கம்பம், தேனி செல்லும் பஸ்கள் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டன. சுமார் 45 நிமிடங்கள் வரை இந்த போராட்டம் நீடித்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு தேவாரம் போலீசார் விரைந்து வந்தனர். தேவாரம் பேரூராட்சி அலுவலகத்தின் ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, விரைந்து தண்ணீர் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டத்தினை கைவிட்டு அங்கிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

The post முறையாக குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் சாலை மறியல்: தேவாரம் பகுதியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: