போபால்: கர்னல் குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜ அமைச்சர் விஜய் ஷாக்கு எதிராக சிறப்பு விசாரணைக்குழுவை மத்தியப் பிரதேச போலீசார் அமைத்தனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளியுறவு செயலாளருடன் இணைந்து ராணுவ பெண் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கினர். இது குறித்து மத்தியப்பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில பழங்குடி அமைச்சர் விஜய் ஷா, கர்னல் குரேஷியின் மதத்தை குறிப்பிட்டு அவர் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சகோதரி என்ற ரீதியில் பேசினார்.
இது சர்ச்சையான நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமைச்சர் விஜய் ஷாவின் மன்னிப்பை ஏற்க மறுத்து அமைச்சருக்கு எதிராக வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை அமைக்க உத்தரவிட்டது. அதன்பேரில், போலீஸ் ஐஜி பிரமோத் வர்மா, டிஐஜி கல்யாண் சக்ரவர்த்தி, எஸ்பி வாஹினி சிங் ஆகியோர் கொண்ட சிறப்பு விசாரணை குழு நேற்று அமைக்கப்பட்டது. இக்குழுவினர் முதல் நிலை அறிக்கையை வரும் 28ம் தேதி தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை
விஜய் ஷாவிடமிருந்து அமைச்சர் பதவியை பிரதமர் மோடி பறிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடும் நிலையில், இந்தூரில் நேற்று முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விஜய் ஷா பங்கேற்கவில்லை.
The post கர்னல் குரேஷி குறித்து சர்ச்சை பேச்சு; பாஜ அமைச்சருக்கு எதிராக விசாரணை குழு அமைப்பு: மபி போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.